தேங்காய் சிரட்டையில் உருவாக்கிய பொருட்கள். 
தமிழகம்

தேங்காய் சிரட்டையில் கலைப்பொருட்கள்: அசத்தும் தென்காசி மாணவர்

செய்திப்பிரிவு

தென்காசியில் உள்ள ஐந்து வர்ணம் பெரியதெருவைச் சேர்ந்த செய்யது இப்ராகிம் என்பவரின் மகன் தமிமுன் அன்சாரி (18). பிளஸ் 2 முடித்துள்ள இவர், சுரண்டை காமராஜர் அரசு கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டில் சேர்ந்துள்ளார். தந்தையை இழந்த இவருக்கு, 8-ம் வகுப்பு படிக்கும்போதே சாக்பீஸில் கலைப் பொருட்கள் தயாரிக்கும் ஆர்வம் ஏற்பட்டது.

இவரது தாயார் சபுரால் மாவு விற்று குழந்தைகளை வளர்த்து வருகிறார். தமிமுன் அன்சாரிக்கு ஒரு தம்பியும், தங்கையும் உள்ளனர். சாக்பீஸில் கலைப் பொருட்களை உருவாக்கிய ஆர்வம், அத்தோடு நின்றுவிடாமல், சிரட்டையில் விதவிதமான கலைப் பொருட்களை வடிவமைக்க கரோனா ஊரடங்கு காலம் இவருக்கு உதவியுள்ளது. கிண்ணம், கம்மல், ஆபரணம், அழகு சாதனப் பொருட்கள் எனஏராளமான கலைப் பொருட்களைதமிமுன் அன்சாரி உருவாக்கியுள்ளார்.

அவர் கூறும்போது, “ எனதுமாமா அகமதுஷா பரோட்டா கடைவைத்துள்ளார். அதனால் சிரட்டைகள் அதிகளவில் கிடைக்கும். சிரட்டைகள் கிண்ணம்போல் இருப்பதால், முதலில் கிண்ணம் உருவாக்கினேன். பின்னர் கரண்டி, கப், கம்மல், செயின், ஆங்கில எழுத்துகள் மற்றும் அழகு சாதனப் பொருட்களை உருவாக்கினேன். இதைப் பார்த்த அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் நன்றாக இருப்பதாக பாராட்டியதுடன் விலைக்கும் கேட்டனர். நான் தயாரிக்கும் பொருட்களை குறைந்த விலைக்கு விற்பனை செய்து வருகிறேன். என்னைப் பார்த்து எனது தம்பி முகமது நிசாருக்கு ஆர்வம் ஏற்பட்டது. அவரும் என்னுடன் சேர்ந்து கலைப் பொருட்களை உருவாக்கி வருகிறார்’’ என்றார்.

SCROLL FOR NEXT