திருப்பரங்குன்றம் அருகே அவனியாபுரம், வெள்ளக்கல் பகுதியில் விபத்துகளைத் தடுக்க போக்குவரத்து போலீஸார், மாநகராட்சி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுக்கா, அவனியாபுரம் வெள்ளக்கல் பகுதியில் அடிக்கடி சாலை விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. இதனைத் தடுக்கும் விதமாகப் போக்குவரத்துக் காவல் உதவி ஆணையாளர் திருமலைக்குமார், போக்குவரத்துக் காவல் ஆய்வாளர் செந்தில் குமரன், மதுரை மாநகராட்சி உதவிப் பொறியாளர் செல்வம் ஆகியோர் வெள்ளக்கல்லில் விபத்து ஏற்படும் பகுதிகளில் ஆய்வு செய்தனர்.
இதில் மதுரை விமான நிலைய சாலைப் பகுதி அதிகப் போக்குவரத்து உள்ள இடமாகும். மேலும் அவனியாபுரம் பகுதிகளில் இருந்து வெள்ளக்கல் பகுதியில் உள்ள மாநகராட்சிக் குப்பைக் கிடங்கிற்கு, தினமும் 400-க்கும் மேற்பட்ட வாகனங்கள், போக்குவரத்து லாரிகள் வந்து செல்வதாலும் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்து ஏற்படுகிறது.
அதனைத் தடுக்கும் விதமாக வெள்ளக்கல் பகுதியில் பேருந்து நிறுத்தம் முன்புறம் போக்குவரத்தைக் கட்டுப்படுத்தும் விதமாகத் தடுப்பு வேலிகளை அமைத்து, சோதனை முறையில் போக்குவரத்தைச் சரி செய்தனர்.
இதனைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் வரும் வாகனங்கள் வேகம் குறைக்கப்பட்டுச் செல்கின்றன. இந்தப் பகுதியில் நடைபெறும் உயிரிழப்பு, தொடர் விபத்தைத் தடுக்க போக்குவரத்துக் காவல் துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதற்குப் பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.