தேமுதிக தலைவர் விஜயகாந்த் விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என, தனியார் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு கடந்த செப்.22-ம் தேதி கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது. இதையடுத்து, சென்னை மியாட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்பு அவருடைய மனைவி பிரேமலதாவும் கரோனா தொற்று பாதிப்பால் அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இருவருமே கரோனா தொற்றிலிருந்து குணமடைந்து அக்டோபர் 2-ம் தேதி மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார்கள். இதனிடையே, நேற்றிரவு (அக். 6) விஜயகாந்துக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தேமுதிக சார்பில் வெளியிட்ட அறிக்கையில், வழக்கமான பரிசோதனைதான், வதந்திகளை நம்ப வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனிடையே, நேற்றிரவு விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்ட வீடியோவிலும், வதந்திகளை நம்ப வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டார்.
இந்நிலையில், விஜயகாந்த் உடல்நலம் தொடர்பாக, இன்று (அக். 7) மியாட் மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் பிரித்வி மோகன்தாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "விஜயகாந்துக்கு கோவிட் - 19 சிகிச்சை முடிந்து, டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு, சீரான திட்டமிடப்பட்ட தொடர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, கதிரியக்க மதிப்பீடு செய்ததில் அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
அவர் கூடிய விரைவில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்" எனத் தெரிவித்துள்ளார்.