தமிழகம்

சாத்தான்குளம் இரட்டைக் கொலை வழக்கில் காவலர் முருகன் 3-வது முறையாக ஜாமீன் தாக்கல்: சிபிஐ பதிலளிக்க உத்தரவு

கி.மகாராஜன்

சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கில் சிறையில் உள்ள காவலர் முருகன் 3-வது முறையாக ஜாமீன் கேட்டு உயர் நீதிமன்றத்தில மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவுக்கு சிபிஐ பதிலளிக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

சாத்தான்குளத்தில் ஜெயராஜ், அவர் மகன் பென்னிக்ஸ் ஆகியோர் கொலை வழக்கில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர். ஒருவர் உயிரிழந்த நிலையில் 9 பேர் மதுரை மத்திய சிறையில் உள்ளனர்.

மதுரை சிறையிலுள்ள சாத்தான்குளம் காவலர் முருகன் ஜாமீன் கேட்டு உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு ஏற்கெனவே 2 முறை தள்ளுபடியான நிலையில் அவர் 3வது முறையாக ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார்.

அதில், வழக்கின் விசாரணை முடிந்துவிட்டது. வழக்கு தொடர்பான ஆவணங்களையும் அதிகாரிகள் சேகரித்துவிட்டனர். எனவே ஜாமீன் வழங்க வேண்டும் எனக் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. சிபிஐ தரப்பில் பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை அக் 16-ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

SCROLL FOR NEXT