தமிழகம்

பதவியேற்று 3 ஆண்டுகள் நிறைவு: ஆளுநருக்கு துணை முதல்வர் வாழ்த்து

செய்திப்பிரிவு

தமிழக ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் பதவி ஏற்று 3 ஆண்டுகள் நிறைவு பெற்ற நிலையில், அவருக்குத் துணை முதல்வர் ஓபிஎஸ் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

தமிழக ஆளுநராக ரோசய்யா இருந்த நிலையில், அவரது பதவிக் காலம் முடிந்ததும் வித்யாசாகர் ராவ் பொறுப்பு ஆளுநராகச் செயல்பட்டு வந்தார். இந்நிலையில் ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் 2017-ம் ஆண்டு அக்டோபர் 6-ம் தேதி பதவி ஏற்றுக்கொண்டார்.

ஆளுநராக 2017-ம் ஆண்டு செப்.29-ல் அறிவிக்கப்பட்டாலும் அக்.6-ல் பதவி ஏற்ற நாளை வைத்து இன்றுடன் 3 ஆண்டுகளை ஆளுநர் பன்வாரிலால் நிறைவு செய்கிறார். இவர் தமிழகத்தின் 20-வது ஆளுநர் ஆவார். தமிழக ஆளுநர்களில் மாவட்ட வாரியாக ஆய்வுக்குச் சென்ற ஆளுநரும் இவர்தான்.

ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் பதவி ஏற்று மூன்றாண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து அவருக்குத் துணை முதல்வர் ஓபிஎஸ் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

ஓபிஎஸ் வாழ்த்துச் செய்தி:

"ஆளுநர் பொறுப்பில் நீங்கள் மூன்று ஆண்டுகளை வெற்றிகரமாக நிறைவு செய்ததற்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவிக்க விரும்புகிறேன். உங்கள் முதிர்ந்த ஞானமும், சரியான நேரத்தில் வழிகாட்டுதலும் கடந்த மூன்று ஆண்டுகளில் மாநில நிர்வாகத்துக்குப் பெரிதும் உதவியுள்ளது.

தமிழக மக்கள் சார்பாகவும், எனது சார்பாகவும், மாநிலத்தின் வளர்ச்சிக்கு உங்களது உற்சாகமான முயற்சிகள் மற்றும் பங்களிப்புக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நீங்கள் நல்ல உடல் நலத்துடன் தேசத்துக்கான உங்கள் மகத்தான சேவையைத் தொடர ஆண்டவனைப் பிரார்த்திக்கிறேன்”.

இவ்வாறு ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT