தமிழகம்

புதுச்சேரியில் புதிதாக 407 பேருக்குக் கரோனா; 550-ஐ நெருங்கிய இறப்பு எண்ணிக்கை

அ.முன்னடியான்

புதுச்சேரியில் இன்று புதிதாக 407 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 29 ஆயிரத்து 682 ஆகவும், இறப்பு எண்ணிக்கை 546 ஆகவும் அதிகரித்துள்ளது.

இது தொடர்பாகப் புதுச்சேரி சுகாதாரத் துறை இயக்குநர் மோகன்குமார் இன்று (அக்.6) கூறும்போது, ''புதுச்சேரியில் 5,255 பேருக்குக் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரி- 266, காரைக்கால்- 89, ஏனாம்- 18, மாஹே- 34 என மொத்தம் 407 பேருக்குத் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், புதுச்சேரியில் இரண்டு பேர், மாஹேவில் ஒருவர் என 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 546 ஆக உயர்ந்துள்ளது. இறப்பு விகிதம் 1.84 சதவீதமாக உள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 29 ஆயிரத்து 682 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவற்றில் புதுச்சேரியில் 2,302 பேர், காரைக்காலில் 500 பேர், ஏனாமில் 54 பேர், மாஹேவில் 76 பேர் என 2,932 பேர் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அதேபோல் புதுச்சேரியில் 1,363 பேர், காரைக்காலில் 76 பேர், ஏனாமில் 79 பேர், மாஹேவில் 72 பேர் என 1,590 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் மூலம் புதுச்சேரி மாநிலத்தில் தற்போது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் உட்பட மொத்தமாக 4,522 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இன்று மட்டும் புதுச்சேரியில் 293 பேர், காரைக்காலில் 55 பேர், ஏனாமில் 27 பேர், மாஹேவில் 15 பேர் என மொத்தம் 390 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 24,614 (82.93 சதவீதம்) ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 2 லட்சத்து 9 ஆயிரத்து 900 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதில் 1 லட்சத்து 77 ஆயிரத்து 219 பரிசோதனைகளுக்கு நெகட்டிவ் என்று முடிவு வந்துள்ளது'' எனத் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT