தமிழகம்

கோவில்பட்டியில் இருந்து கொடைக்கானலுக்கு கடத்த முயன்ற 4 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

எஸ்.கோமதி விநாயகம்

கோவில்பட்டியில் இருந்து கொடைக்கானலுக்கு கடத்த முயன்ற 4 டன் ரேஷன் அரிசியை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

கோவில்பட்டியிலிருந்து ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக டிஎஸ்பி கலை கதிரவனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அவரது உத்தரவின் பேரில் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் சுதேசன், தலைமை காவலர் செந்தூர் பாண்டியன், காவலர் பூவரசன் ஆகியோர் இன்று அதிகாலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது எட்டயபுரம் சாலையில் தனியார் மண்டபத்துக்கு அருகே நின்று ஒரு வேன் கொண்டிருந்தது. போலீஸார் வருவதை பார்த்த வேனின் ஓட்டுனர், உடனடியாக வேனை எடுத்துச் செல்ல முயன்றார்.

சந்தேகமடைந்த போலீஸார் வேனை மடக்கிப் பிடித்து, ஓட்டுனரிடம் விசாரணை நடத்தினர். இதில் அவர் திண்டுக்கலைச் சேர்ந்த ராஜ்மோகன் (30) என்பது தெரியவந்தது. வேனை சோதனையிட்டபோது அதில் 50 கிலோ கொண்ட ரேஷன் அரிசி 80 மூடைகள் இருந்தன.

கோவில்பட்டி அருகே இனாம் மணியாச்சி ஊராட்சி பகுதியில் இருந்து ரேஷன் அரிசி மூடைகளை கொடைக்கானலுக்கு கொண்டு சென்று, அங்குள்ள அரவை ஆலை அரிசியை அரைத்து கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கு கோழித் தீவனத்துக்காக கொண்டு செல்ல இருப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து வேனை பறிமுதல் செய்து போலீஸார் ஓட்டுநரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT