மாமல்லபுரம் கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளை மகிழ்ச்சியாக கழிக்கும் சுற்றுலா பயணிகள். படம்: கோ.கார்த்திக் 
தமிழகம்

மாமல்லபுரம் கடற்கரையில் விடுமுறையை கொண்டாட குவிந்த சுற்றுலா பயணிகள்

செய்திப்பிரிவு

மாமல்லபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளை மகிழ்ச்சியுடன் கழிப்பதற்காக கடற்கரையில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

ஊரடங்கு காரணமாக பொழுதுபோக்கு அம்சங்கள் முடங்கிஉள்ளதால், பொதுமக்கள் பல்வேறு வகையில் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், சுற்றுலாவை சார்ந்த தொழிலாளர்களும் வருவாய் இன்றி பாதிக்கப்பட்டனர். சுற்றுலாத் துறைக்கு இம்மாதம் தளர்வுகள் வழங்கப்படும் எனகருதப்பட்ட நிலையில், ஏற்கெனவே உள்ள நிலை தொடரும் என அரசு அறிவித்துள்ளது. இதனால், சுற்றுலாவை சார்ந்த தொழிலாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், மாமல்லபுரம் கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளான நேற்று பொழுதுபோக்குவதற்காக அதிக அளவில் மக்கள் குவிந்தனர். மேலும், கடற்கரை செல்லும் வழியில் உள்ள கடைகளும் திறக்கப்பட்டதால், தின்பண்டங்கள் மற்றும் கடல் சார்ந்த அழகுசாதனப் பொருட்கள், விளையாட்டு பொருட்களை பொதுமக்கள் விரும்பி வாங்கிச் சென்றனர். கடற்கரையில் பொதுமக்கள் கூடக்கூடாது என அறிவிக்கப்பட்ட நிலையிலும், சுற்றுலா பயணிகள் கூட்டம் காணப்பட்டது.

இதுகுறித்து, சிறு வியாபாரிகள் கூறும்போது, “ஊரடங்கு உத்தரவால் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் வருகையின்றி வெறிச்சோடி காணப்பட்ட மாமல்லபுரம் கடற்கரையில், 6 மாதங்களுக்கு பிறகு கூட்டம் காணப்படுகிறது. பொழுது போக்குக்காக கடற்கரைக்கு வந்தசுற்றுலா பயணிகளால் தின்பண்டங்கள் உட்பட பல்வேறு பொருட்கள் விற்பனையானதால், நாங்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளோம்” என்றனர்.

SCROLL FOR NEXT