நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால், கிருஷ்ணகிரி அணையின் நீர்மட்டம் 42.45 அடியாக உயர்ந்துள்ளது. அதிக அளவில் தண்ணீர் தேங்கி கடல் போன்று காட்சியளிக்கும் கிருஷ்ணகிரி அணை. படம்: எஸ்.கே.ரமேஷ் 
தமிழகம்

கெலவரப்பள்ளி அணையிலிருந்து 808 கன அடி நீர் திறப்பு: தென்பெண்ணை கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

செய்திப்பிரிவு

ஓசூர் கெலவரப்பள்ளி அணையிலிருந்து தென்பெண்ணை ஆற்றில் விநாடிக்கு 808 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால், கரையோரப்பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள தென்பெண்ணை ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான நந்திமலை, பெங்களூரு நகரம், ஊரகப் பகுதிகளில் கடந்த 3 நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக தென்பெண்ணை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்றைய நிலவரப்படி ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 922 கனஅடியாக அதிகரித்தது.

கெலவரப்பள்ளி அணையின் மொத்த கொள்ளளவு 44.28அடி. தற்போதைய அணையின் நீர் மட்டம் 40.34 அடியாக உள்ளது. அணையின் பாதுகாப்பு கருதி கெலவரப்பள்ளி அணையி லிருந்து திறக்கப்படும் நீரின் அளவு 808 கனஅடியாக அதிகரிக் கப்பட்டுள்ளது.

இதனால் தென் பெண்ணை ஆற்றை ஒட்டி உள்ள கிராம மக்களுக்கு, மாவட்ட நிர்வாகம் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நீர்மட்டம் அதிகரிப்பு

கிருஷ்ணகிரி அணைக்கு நேற்று முன்தினம் நீர்வரத்து விநாடிக்கு 497 கனஅடியாக இருந்தது. நீர்வரத்து தொடர்ச்சியாக அதிக அளவில் இருந்து வருவதால்அணையின் நீர் மட்டம் 42.45 அடியாக உயர்ந்தது. அணையில் இருந்து பாசனத்துக்காக வலது மற்றும் இடதுபுறக் கால்வாய்கள் வழியாக விநாடிக்கு 114 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

கெலவரப்பள்ளி அணையி லிருந்து திறக்கப்பட்டுள்ள தண்ணீர், இன்று கிருஷ்ணகிரி அணைக்கு வந்து சேரும் என்பதால், கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரிக்கும். நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால், அணையின் முழு கொள்ளளவான 52 அடியை விரைவில் எட்டும் என பொதுப் பணித்துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.

கிருஷ்ணகிரியில் மாவட்டத்தில் நேற்று முன்தினம் பரவலாகமழை பெய்தது. நேற்று காலை 7 மணி நிலவரப்படி மழையளவு (மில்லி மீட்டரில்) வருமாறு: ராயக்கோட்டை 23, கிருஷ்ணகிரி 21.20, போச்சம்பள்ளி 13.20, பாரூர் 12, தேன்கனிக்கோட்டை 6, ஓசூர் 2.

SCROLL FOR NEXT