தமிழகம்

அரசு தடை உத்தரவை மீறி கிராம சபை கூட்டம் நடத்தியதாக திமுக எம்.பி கனிமொழி உள்பட 300 பேர் மீது வழக்கு

ரெ.ஜாய்சன்

அரசு தடை உத்தரவை மீறி கிராம சபை கூட்டம் நடத்தியதாக திமுக எம்.பி கனிமொழி உள்பட 300 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் அனைத்து ஊராட்சிகளிலும் கிராமசபை கூட்டங்கள் நடைபெறுவதாக தமிழக அரசு அறிவித்தது. ஆனால், கரோனா பரவலின் காரணமாக கிராம சபை கூட்டம் ரத்து செய்யப்பட்டது. அத்துடன், மாற்றுக் கட்சிகள் நடத்தவும் தடை விதிக்கப்பட்டது.

இந்தநிலையில் அனைத்து ஊராட்சிகளிலும் மக்களை சந்தித்து வேளாண் சட்டம் குறித்து எடுத்துரைக்கும் வகையில் தி.மு.க சார்பில் கிராமசபை கூட்டம் நடத்த அக்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கட்சியினருக்கு உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி, நேற்று (அக்.2) பல்வேறு இடங்களிலும் திமுக சார்பில் தடையை மீறி கிராமசபை கூட்டம் நடத்தப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே இடைச்சிவிளை கிராமத்தில் திமுக எம்.பி. கனிமொழி தலைமையில் கூட்டம் நடத்தப்பது.

இதனையடுத்து, அரசு தடை உத்தரவை மீறி கிராம சபை கூட்டம் நடத்தியதாக தூத்துக்குடி மக்களவை தொகுதி உறுப்பினர் கனிமொழி, திருச்செந்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன், அரசூர் ஊராட்சி தலைவர் தினேஷ் ராஜசிங், சாத்தான்குளம் திமுக ஒன்றிய செயலாளர் பாலமுருகன் உள்ளிட்ட 300 பேர் மீது தட்டார்மடம் போலீஸார் இன்று (சனிக்கிழமை) வழக்குப் பதிவு செய்தனர்.

SCROLL FOR NEXT