மதுவிலக்கு அமலாக்கப் பிரிவில் பணியாற்றி கள்ளச்சாராய ஒழிப்புப் பணியில் சிறப்பாகச் செயல்பட்ட 2 பெண் ஆய்வாளர்கள் உட்பட 5 போலீஸாருக்கு காந்தியடிகள் காவல் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கள்ளச்சாராய ஒழிப்புப் பணியில் நேர்மையுடன் சிறப்பாகச் செயல்படும் காவல்துறை அதிகாரிகளை ஊக்குவிக்கும் வகையில் ஆண்டுதோறும் காந்தியடிகள் காவல் விருது வழங்கப்படுகிறது. இந்த விருதுக்கான இந்த ஆண்டு தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
''கள்ளச்சாராய ஒழிப்புப் பணியில் பாராட்டத்தக்க வகையில் பணியாற்றியமைக்காக 5 பேருக்கு காந்தியடிகள் காவலர் விருது வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
1. மகுடீஸ்வரி, பெண் காவல் ஆய்வாளர், மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு, புனித தோமையார் மலை, தெற்கு மண்டலம். சென்னை பெருநகர காவல் ஆய்வாளர்.
2. லதா, பெண் காவல் ஆய்வாளர், மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு, முசிறி-துறையூர், திருச்சி மாவட்டம்.
3. செல்வராஜூ, காவல் உதவி ஆய்வாளர், மத்திய புலனாய்வுப் பிரிவு, சேலம் மண்டலம்.
4. சண்முகநாதன், ( தலைமைக் காவலர்), ஸ்ரீவில்லிபுத்தூர் தாலூகா காவல் நிலையம், அயல்பணி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு, காவல் துணைக் கண்காணிப்பாளர் அலுவலகம், விருதுநகர் மாவட்டம்.
5. ராஜசேகரன், தலைமைக் காவலர் , கீழ்கொடுங்காலூர் காவல் நிலையம், அயல்பணி மத்திய புலனாய்வுப் பிரிவு, திருவண்ணாமலை மாவட்டம்.
இவ்விருது, முதல்வரால் 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 26 ஆம் நாள், குடியரசு தினத்தன்று வழங்கப்படும். இவ்விருதுடன், பரிசுத்தொகையாக ரூ.40,000/- ஒவ்வொருவருக்கும் வழங்கப்படும்''.
இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.