தமிழகத்தில் ரவுடிகளை ஒழிக்க புதிய சட்டம் கொண்டுவரப்பட உள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் டிஜிபி தெரிவித்துள்ளார்.
ரவுடிகள் தொடர்பான வழக்கை ஏற்கெனவே விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் தலைமையிலான அமர்வு, "ரவுடிகளால் காவல் துறையினர் தாக்கப்படும் சம்பவங்கள் வருத்தம் அளிக்கின்றன. தூத்துக்குடியில் ரவுடியைப் பிடிக்கச் சென்றபோது உயிரிழந்த காவலர் சுப்ரமணியன் மரணம் குறித்து எதிர்க்கட்சிகள் வாய் திறக்காதது ஏன்? இதுபோன்ற சம்பவங்களால் பாதிக்கப்படுவோர் குடும்பத்திற்கு அரசியல் கட்சிகள் உதவ வேண்டும்.
ரவுடிகள் இறக்க நேரிடும்போது காட்டப்படும் அக்கறையை காவல் துறையினர் மீது, மனித உரிமை ஆணையம் ஏன் காட்டுவதில்லை? ரவுடிகளையும், சமூக விரோதிகளையும் ஒழிக்க கடுமையான சட்டம் இயற்றப்பட வேண்டும். ரவுடிகளைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து டிஜிபி, 2 வாரத்தில் விளக்கம் அளிக்க வேண்டும்" என்று உத்தரவிட்டிருந்தனர்.
இந்த வழக்கு இன்று (அக்.1) மீண்டும் நீதிபதிகள் கிருபாகரன், வேல்முருகன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, அரசுத் அரசு தரப்பு வழக்கறிஞர், தமிழகத்தில் ரவுடிகளை ஒழிக்க புதிய சட்ட வரைவு மசோதா, குழுவின் மூலம் தயாரிக்கப்பட்டு தமிழக அரசுக்கு அனுப்பி வைத்துள்ளதாகத் தெரிவித்தார்.
இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், தமிழக அரசின் உள்துறைச் செயலாளர், புதிய சட்ட வரைவு மசோதா எப்போது சட்டப்பேரவையில் முன் வைக்கப்பட உள்ளது என்று பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு, வழக்கின் தீர்ப்பைத் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்துள்ளார்.