தமிழகம்

வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி, வெப்பச் சலனம்; 6 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

செய்திப்பிரிவு

வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி மற்றும் வெப்பச் சலனம் காரணமாக தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழையும், வட மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

“வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி மற்றும் வெப்பச் சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கிருஷ்ணகிரி, தருமபுரி, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

ஏனைய வட தமிழக மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

அடுத்த 48 மணி நேரத்தில் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்,

அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸையும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸையும் ஒட்டி பதிவாகக்கூடும்.

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழை பெய்த விவரம்:

வடபுதுப்பட்டு (திருப்பத்தூர்) ,வேப்பூர் (கடலூர்) தலா 13 செ.மீ., கட்டுமயிலூர் (கடலூர் ) 12 செ.மீ., சிதம்பரம் (கடலூர்), கலசப்பாக்கம் (திருவண்ணாமலை) தலா 9 செ.மீ., காவேரிப்பாக்கம் (ராணிப்பேட்டை ), கோபிசெட்டிபாளையம் (ஈரோடு ), ஆம்பூர் (திருப்பத்தூர்), சேத்பட் (திருவண்ணாமலை), லக்கூர் (கடலூர்) தலா 8 செ.மீ., கிருஷ்ணகிரி, வாணியம்பாடி (திருப்பத்தூர் ), மைலம்பட்டி (கரூர் ), அகரம் சீகூர் (பெரம்பலூர் ), வெம்பாக்கம் (திருவண்ணாமலை ) தலா 7 செ.மீ.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

மத்திய வங்கக் கடல் பகுதியில் பலத்த காற்று தென்மேற்கு திசையில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். இப்பகுதிகளுக்குச் செல்லும் மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

கடல் உயர் அலை முன்னறிவிப்பு ஏதுமில்லை”.

இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT