இந்து சமய அறநிலையத்துறையில் 488 கோடி ரூபாய் இருக்கும் நிலையில், உபரி நிதியில் இருந்து 10 கோடி ரூபாய் பெறுவது ஏன், சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ள வேண்டும் என எந்தெந்த கோயில்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன என இந்து சமய அறநிலையத்துறை விளக்கம் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள கிராமக் கோயில்களின் மேம்பாட்டுக்காக பெரிய கோயில்களின் உபரி நிதியில் இருந்து 10 கோடி ரூபாயைச் செலுத்தும்படி இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பிறப்பித்த உத்தரவை எதிர்த்த வழக்குகள், நீதிபதிகள் சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தன.
வழக்கு விசாரணையில், “கோயில் உபரி நிதியைப் பெற இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஒப்புதல் மட்டுமே அளிக்க முடியும், பணம் கொடுப்பது குறித்து அறங்காவலர்கள் குழுதான் முடிவெடுக்க முடியும். இந்து சமய அறநிலையத்துறையிடம் 488 கோடி இருக்கும் நிலையில், கோயில் உபரி நிதியில் இருந்து கொடுக்க வேண்டியதில்லை. பயன்பெறும் ஆயிரம் கோயில்களின் பட்டியலை வெளியிட வேண்டும்.
கோயில்களின் பூஜை உள்ளிட்ட அன்றாடத் தேவைகளுக்கு மட்டுமே ஒரு லட்சம் ரூபாய் போதுமானதாக இருக்கும். கோயில்களைச் சீரமைக்க இந்த நிதி போதாது” என மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.
இதையடுத்து நீதிபதிகள், “பெரிய கோயில்களின் உபரி நிதியில் இருந்து பெறப்படும் 10 கோடி ரூபாய் நிதியில் சிறிய கோயில்கள் சீரமைப்பு எப்படிச் செயல்படுத்தப்பட உள்ளது, எந்த அடிப்படையில் ஆயிரம் கிராமக் கோயில்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் நிர்ணயிக்கப்பட்டது, இந்து சமய அறநிலையத்துறையிடம் 488 கோடி ரூபாய் இருக்கும் நிலையில், உபரி நிதியில் இருந்து 10 கோடி ரூபாய் பெறுவது ஏன், சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ள வேண்டும் என எந்தெந்த கோயில்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன?” எனக் கேள்வி எழுப்பி, நாளை (அக்.1) விளக்கமளிக்க இந்துசமய அறநிலையத்துறைக்கு உத்தரவிட்டனர்.
மேலும், கோயில்களுக்கு நிதி ஒதுக்கப்படும் விவகாரத்தில் எடுக்கப்படும் முடிவுகள், அரசின் இலவசத் திட்டங்கள் போல இருக்கக் கூடாது எனவும் நீதிபதிகள் அறிவுறுத்தினர்.