அரியர் தேர்வுகளுக்குக் கட்டணம் செலுத்திய மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்ற அறிவிப்பு, பல்கலைக்கழக மானியக் குழு விதிகளுக்குப் புறம்பானது என அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுமம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில், கலை - அறிவியல், பொறியியல், எம்.சி.ஏ. படிப்புகளுக்கான அரியர் மாணவர்களும் தேரச்சி பெற்றதாக அறிவித்த தமிழக அரசின் முடிவை ரத்து செய்யக் கோரி அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி, ராம்குமார் ஆதித்தன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தனர்.
இந்த வழக்குகளுக்குப் பதிலளித்து அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுமம் (ஏஐசிடிஇ) இன்று (செப். 30) பதில் மனுவைத் தாக்கல் செய்துள்ளது.
அதில், தேர்வு நடத்தி மாணவர்களை மதிப்பீடு செய்யாமல், அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்த தமிழக அரசின் அரசாணை, அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழும விதிகளுக்கு முரணானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரோனா பேரிடர் காலத்தில் இறுதியாண்டு மாணவர்கள் தவிர, பிற மாணவர்களுக்குத் தேர்வு நடத்துவது சிக்கலானது என்பதால், அடுத்த கல்வியாண்டுக்கு மாணவர்களை முன்னேற்றி, அவர்கள் தொடர்ந்து ஆன்லைன் வகுப்புகளில் கலந்துகொள்ளச் செய்வதற்கு ஏதுவாக பல்கலைக்கழக மானியக் குழு சுற்றறிக்கை வெளியிட்டதாகவும், இறுதிப் பருவத் தேர்வு கண்டிப்பாக நடத்தப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுமம் கூறியுள்ளது.
அனைத்துத் தேர்வுகளிலும் தேர்ச்சி அடைந்தவர்களுக்கு மட்டுமே பட்டம் வழங்கப்படும் எனவும், மாணவர்கள் தேர்வு எழுதுவதில் இருந்து எந்த விலக்கும் அளிக்கப்படவில்லை எனவும், அரியர் தேர்வுகளுக்குக் கட்டணம் செலுத்திய மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்ற அறிவிப்பு விதிகளுக்குப் புறம்பானது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இறுதியாண்டு மாணவர்களின் அரியர் பாடங்களுக்குத் தேர்வு நடத்தப்பட வேண்டும் என பல்கலைக்கழக மானியக் குழு விதிமுறைகள் அறிவித்துள்ளதாகவும், இந்த விதிகளைப் பின்பற்றும்படி அனைத்துத் தொழில்நுட்பப் பல்கலைக்கழகங்களுக்கும், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களுக்கும் அறிவுறுத்தியுள்ளதாக அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுமம், தனது பதில் மனுவில் தெரிவித்துள்ளது.
இந்த வழக்குகள், விரைவில் மீண்டும் விசாரணைக்கு வர உள்ளன.