தமிழகம்

இந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழை இயல்பை விட குறைவாக இருக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

செய்திப்பிரிவு

வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி மற்றும் வெப்பச் சலனம் காரணமாக தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட தகவல்:

“வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி மற்றும் வெப்பச் சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு புதுக்கோட்டை, சிவகங்கை, கரூர், திருச்சிராப்பள்ளி, சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும்.

தென் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் ஏனைய உள் மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.

அடுத்த 48 மணி நேரத்தில் வட கடலோர மாவட்டங்கள், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், பெரம்பலூர், அரியலூர், விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸையும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸையும் ஒட்டி பதிவாகக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழை பெய்த விவரம்:

அண்ணாமலை நகர் (கடலூர் ), சிதம்பரம் தலா 13 செ.மீ., கொள்ளிடம் (நாகப்பட்டினம்) 11 செ.மீ., கொத்தவச்சேரி (கடலூர்), 9 செ.மீ., திருக்கழுக்குன்றம் (செங்கல்பட்டு), ஏத்தாப்பூர் (சேலம்) தலா 8 செ.மீ., வானமாதேவி (கடலூர்), தொழுதூர் (கடலூர்), கங்காவல்லி (சேலம்), மணலூர்பேட்டை (கள்ளக்குறிச்சி ), தழுத்தலை (பெரம்பலூர் ) தலா 7செ.மீ.

மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை

கடல் உயர் அலை முன்னறிவிப்பு ஏதுமில்லை .

இந்த வருடம் வடகிழக்குப் பருவமழை இயல்பை விட சற்று குறைவாக, குறிப்பாக தென் தமிழக மாவட்டங்களில் பதிவாகும் என்று உலக வானிலை மையத்தின் தெற்காசிய கூட்டமைப்பு (பசிபிக் மற்றும் இந்திய பெருங்கடல் பகுதியில் நிலவும் வெப்பநிலை மாறுபாட்டின் (LA-NINA, IOD அடிப்படையில்) அறிவித்துள்ளது''.

இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT