தமிழகம்

கரோனா தொற்று; விஜயகாந்த், பிரேமலதா உடல்நிலை விவரம்: தனியார் மருத்துவமனை அறிவிப்பு

செய்திப்பிரிவு

தேமுதிக தலைவர் விஜயகாந்த், பிரேமலதா விஜயகாந்த் ஆகியோர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் இருவரது உடல்நிலை குறித்து தனியார் மருத்துவமனை தகவல் வெளியிட்டுள்ளது.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் தமிழக அரசியல் களத்தில் திமுக, அதிமுகவுக்கு அடுத்து நடிகர் என்கிற செல்வாக்கில் தனியாகக் கட்சி தொடங்கி தமிழகத்தில் 2011-ம் ஆண்டு எதிர்க்கட்சி அந்தஸ்தில் அமர்ந்தார். பின்னர் அதிமுகவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கூட்டணியிலிருந்து விலகினார்.

2016 தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியால் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்தார். அந்த நேரத்தில் இருந்த அரசியல் சூழலில் மக்கள் நலக் கூட்டணி படுதோல்வியைத் தழுவியது. அதன் பின்னர் அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு வெளிநாட்டில் மருத்துவ சிகிச்சை பெற்றார். தொடர்ந்து முழுநேர அரசியலில் ஈடுபடாமல் உடல்நலக் குறைவு காரணமாக ஓய்வில் இருந்து வருகிறார்.

இந்நிலையில் தமிழகத்தில் கரோனா தொற்று பரவிய நிலையில் வெளியில் எங்கும் செல்லாமல் ஓய்விலிருந்தார் விஜயகாந்த். கடந்த 10 நாட்களுக்கு முன் தேமுதிக உதயமான தினத்தில் வெளியில் வந்தார். இதில் அவருக்குக் கரோனா தொற்று ஏற்பட்டதால் ராமாவரம் மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்த்வமனை வட்டாரம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் அவரது மனைவியும் தேமுதிக பொருளாளருமான பிரேமலதாவுக்கும் கரோனா தொற்று ஏற்பட்டதாகத் தகவல் வெளியானது. இந்நிலையில் அவரும் மியாட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக இன்று அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர்கள் இருவரின் உடல்நிலை குறித்தும் மியாட் மருத்துவமனை அறிவித்துள்ளது.

மியாட் மருத்துவமனை நிர்வாக இயக்குனர் ப்ரித்வி மோகன் தாஸ் இன்று வெளியிட்ட அறிவிப்பு:

“தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் செப்டம்பர் 28-ம் தேதி கோவிட் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு தொற்று உறுதியாகி சென்னை மியாட் மருத்துவமனையில் செப்டம்பர் 29 ஆம் தேதி அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் உடல்நிலை சீராக உள்ளது. மருத்துவக் குழுவின் கண்காணிப்பில் உள்ளார்.

பிரேமலதா விஜயகாந்தின் முதல்நிலைப் பரிசோதனைக்குப் பின் தேமுதிக தலைவர் விஜயகாந்த் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார். அவரின் உடல்நிலை சீராக உள்ளது, நோய்க்கான அறிகுறி இல்லை. தொடர் மருத்துவச் சேவைகளில் அவர் நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளார்”.

இவ்வாறு மியாட் மருத்துவமனை நிர்வாக இயக்குனர் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT