தமிழகம்

சென்னையில் இருந்து 6 மாதங்களுக்கு பிறகு திருவனந்தபுரம், மங்களூருவுக்கு சிறப்பு ரயில்: கேரளா, கர்நாடகா செல்லும் பயணிகள் மகிழ்ச்சி

செய்திப்பிரிவு

சென்னையில் இருந்து 6 மாதங்களுக்குப் பிறகு திருவனந்தபுரம், மங்களூருவுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதனால் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

கரோனா ஊரடங்கில் சற்று தளர்வு அளிக்கப்பட்டுள்ளதால், தெற்கு ரயில்வே சார்பில் தமிழகத்தின் பிற பகுதிகளுக்கு 15-க்கும்மேற்பட்ட சிறப்பு ரயில்கள்இயக்கப்பட்டு வருகின்றன. இதற்கிடையே, பிற மாநிலங்களுக்கு செல்லும் வகையில் முக்கியமான வழித்தடங்களில் பயணிகள் ரயிலை இயக்க வேண்டும் என்றகோரிக்கை எழுந்தது. அதன்படி, ரயில்வே வாரியத்தின் அனுமதியைத் தொடர்ந்து, கடந்த 6 மாதங்களுக்கு பிறகு, சென்னை சென்ட்ரலில் இருந்து திருவனந்தபுரத்துக்கும், மங்களூருவுக்கும் இருமார்க்கங்களில் தினசரி சிறப்பு ரயில்களின் சேவை நேற்று முன்தினம் தொடங்கியது. இதேபோல், சென்னை சென்ட்ரலில் இருந்து மைசூருக்கு விரைவில் சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது. இதனால், கேரளா, கர்நாடகா செல்லும் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இதுதொடர்பாக பயணிகள் சிலர் கூறும்போது, “நீண்ட நாட்களுக்குப் பிறகு கேரளா, கர்நாடகாவுக்கு பயணிகள் சிறப்பு ரயில்களை இயக்குவது மகிழ்ச்சியாக இருக்கிறது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து பல்வேறு இடங்களுக்கு சிறப்பு ரயில்களை இயக்குவதால், பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளது. இருப்பினும், போதிய ஏற்பாடுகள் செய்யப்படாமல் உள்ளன. குறிப்பாக, பயணிகளுக்கான அறிவிப்புகளை உடனுக்குடன் வெளியிடுவதில்லை. ஒரு வரிசை மட்டுமே அனுமதிக்கப்படுவதால், பயணிகள் கூட்டம் சுமார் ஒரு கி.மீ தூரத்துக்கு நிற்கிறது. இளைஞர்கள் சிலர் குறுக்கு வழியில் நுழைந்து செல்கின்றனர். இதனால், மூத்த குடிமக்கள், குழந்தைகள் நிற்க முடியாமல் அவதிப்படுகின்றனர். எனவே, பயணிகள் வந்து செல்ல வசதியாக தெற்கு ரயில்வே உரிய ஏற்பாடுகள் செய்து தர வேண்டும்’’ என்றனர்.

SCROLL FOR NEXT