போலீஸ் அதிகாரிகளின் பெயரில் முகநூலில் போலி கணக்கு தொடங்கி மோசடியில் ஈடுபட்ட குற்றவாளிகளை கைது செய்ய சென்னை தனிப்படை போலீஸார் விரைவில் ஜார்க்கண்ட் மாநிலம் செல்கின்றனர்.
முகநூல் (ஃபேஸ்புக்) பக்கத்தில் சில போலீஸ் அதிகாரிகளின் புகைப்படத்துடன் அவர்களது பெயரில் போலி கணக்கு தொடங்கிய மர்ம நபர்கள், தான் பணக் கஷ்டத்தில் இருப்பதாகவும், அவசரமாக பணம் தேவைப்படுவதாகவும் கூறி அதில் தகவல்களை பதிவிட்டனர். சிலர் இதை நம்பி, சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகளுக்கு அனுப்புவதாக நினைத்து, மோசடி நபர்களுக்கு பணத்தை அனுப்பினர்.
சென்னை காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால், கூடுதல் காவல் ஆணையர் ஆர்.தினகரன்,உதவி ஆணையர் ஜூலியஸ் சீசர் உட்பட தமிழகம் முழுவதும் பல்வேறு காவல் உயர் அதிகாரிகளின் பெயரில் இதுபோன்ற மோசடி நடந்திருப்பது தெரியவந்தது.
இந்நிலையில் மோசடி நபர்களை கைது செய்ய சைபர் கிரைம் போலீஸாருக்கு சென்னை காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் உத்தரவிட்டார். அதன்படி, தனிப்படை போலீஸார் தீவிர விசாரணையில் இறங்கினர். இதில், ஜார்க்கண்ட் மாநிலத்தில் இருந்து மர்ம நபர்கள் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக அந்த மாநில போலீஸாருடன் ஆலோசனை நடத்தியுள்ள சென்னை தனிப்படை போலீஸார், மோசடி நபர்களை கைது செய்ய விரைவில் ஜார்க்கண்ட் செல்கின்றனர்.