பனசக்காட்டில் அம்புலி ஆற்றில் நாவல் விதை விதைக்கிறார் அன்பரசன். 
தமிழகம்

ஆலங்குடி அருகே ஆற்றுப் பகுதியில் தனி நபராக நாவல் பழ விதைகளை விதைக்கும் இளைஞர்

கே.சுரேஷ்

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே தனி நபராக நாவல் பழத்தின் விதைகளை ஆற்றுப் பகுதியில் விதைத்து வருகிறார், முதுகலைப் பட்டதாரி ஒருவர்.

கொத்தமங்கலம் ஊராட்சி பனசக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் சி.அன்பரசன். முதுகலைப் பட்டதாரியான இவர், ஆசிரியர் வேலைக்கான தேர்வுக்குத் தயாராகி வருகிறார். மேலும், பனை மரங்கள் பாதுகாப்பு போன்றவற்றில் கவனம் செலுத்தும் இயற்கை ஆர்வலரான இவர் , தனது சொந்த ஊரில் உள்ள நாவல் மரங்களில் விழுந்து கிடக்கும் நாவல் விதைகளைச் சேகரித்து வந்து, ஆற்றுப் பகுதியில் தினசரி விதைத்து வருகிறார்.

இதுகுறித்து 'இந்து தமிழ்' நாளிதழிடம் அன்பரசன் கூறுகையில், "நாவல் பழமானது நீரிழிவு, குடல் புண், கல்லீரல் கோளாறு போன்றவற்றைக் குணப்படுத்தக்கூடிய மருந்தாகத் திகழ்கிறது. கஜா புயலுக்கு இப்பகுதியில் ஏராளமான நாவல் மரங்கள் சாய்ந்துவிட்டன. புதிதாக நாவல் மரக் கன்றுகளை வளர்ப்பதும் குறைந்துவிட்டது.

எனவே, மனிதர்களுக்கு அருமருந்தாகவும், பறவைகளுக்கு உணவாகவும் உள்ளதால் கடந்த சில மாதங்களாக நாவல் மரங்களின் அடியில் கிடந்த 5,000-க்கும் மேற்பட்ட விதைகளைச் சேகரித்து வந்தேன்.

தற்போது மழை பெய்து வருவதால் கொத்தமங்கலத்தில் இருந்து சேந்தன்குடி வரை அம்புலி ஆறு, ஆற்றின் கரையோரங்களில் தினசரி சென்று மாலை நேரங்களில் நாவல் விதைகளை விதைத்து வருகிறேன்.

மேலும், நாவல் செடியை கால்நடைகள் கடித்துவிடாது என்பதாலும், வறட்சியைத் தாங்கி வளரும் என்பதாலும் இக்கன்றுகளை எளிதில் காப்பாற்றிவிடலாம். தேவைப்பட்டால் வெயில் காலத்தில் தண்ணீர் ஊற்றவும் முயற்சி எடுக்க உள்ளேன்" என்றார்

SCROLL FOR NEXT