பிரதிநிதித்துவப் படம் 
தமிழகம்

புதுச்சேரியில் புதிதாக 372 பேருக்குக் கரோனா தொற்று: மேலும்13 பேர் உயிரிழப்பு

அ.முன்னடியான்

புதுச்சேரியில் இன்று புதிதாக 372 பேருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 13 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 26 ஆயிரத்து 400 ஆகவும், உயிரிழந்தோர் எண்ணிக்கை 513 ஆகவும் உயர்ந்துள்ளது.

இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமார் இன்று (செப். 27) கூறியதாவது:

"புதுச்சேரியில் 4,623 பேருக்குக் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரி-270, காரைக்கால்-72, ஏனாம்-11, மாஹே-19 என மொத்தம் 372 பேருக்குத் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமார்: கோப்புப்படம்

மேலும், புதுச்சேரியில் 10 பேர், காரைக்காலில் 3 பேர் என 13 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 513 ஆக உயர்ந்துள்ளது. இறப்பு விகிதம் 1.94 சதவீதமாக உள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 26 ஆயிரத்து 400 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுள் புதுச்சேரியில் 2,781 பேர், காரைக்காலில் 510 பேர், ஏனாமில் 97 பேர், மாஹேவில் 35 பேர் என 3,423 பேர் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

அதேபோல், புதுச்சேரியில் 1,444 பேர், காரைக்காலில் 173 பேர், ஏனாமில் 135 பேர், மாஹேவில் 64 பேர் என மொத்தம் 1,816 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் மூலம் புதுச்சேரி மாநிலத்தில் தற்போது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் உட்பட மொத்தமாக 5,239 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இன்று புதுச்சேரியில் 365 பேர், காரைக்காலில் 45 பேர், ஏனாமில் 26 பேர், மாஹேவில் 7 பேர் என மொத்தம் 443 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 20 ஆயிரத்து 648 (78.21 சதவீதம்) ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை 1 லட்சத்து 71 ஆயிரத்து 561 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதில் 1 லட்சத்து 41 ஆயிரத்து 679 பரிசோதனைகளுக்கு 'நெகட்டிவ்' என்று முடிவு வந்துள்ளது".

இவ்வாறு மோகன்குமார் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT