ஈரோட்டில் கரோனாவால் இறந்தவர் உடலை, பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றி, அவரது மத வழக்கப்படி அடக்கம் செய்யும் எஸ்டிபிஐ மற்றும் பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா தன்னார்வ குழுவினர் (கோப்புப்படம்) 
தமிழகம்

கரோனாவால் உயிரிழந்தவர்களை மனிதநேயத்தோடு அடக்கம் செய்யும் தன்னார்வ குழுவினர்

செய்திப்பிரிவு

ஈரோட்டில், கரோனாவால் உயிரிழந்தவர்களின் உடலை மனிதநேயத்துடன் அடக்கம் செய்யும் பணியை எஸ்டிபிஐ மற்றும் பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா அமைப்பின் தன்னார்வ குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

கரோனா தாக்கத்தால் ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 78 பேர் உயிரிழந்துள்ளனர்.

கரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் உடலை உலக சுகாதார நிறுவனம் வலியுறுத்தியுள்ள பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி அடக்கம் செய்ய வேண்டியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் இப்பணியை எஸ்டிபிஐ மற்றும் பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியாவின் தன்னார்வலர்கள் குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

இதுகுறித்து எஸ்டிபிஐ கட்சியின் ஈரோடு மாவட்ட பொதுச்செயலாளர் முகமது லுக்மானுல் ஹக்கீம் கூறியதாவது:

கரோனா தொற்றால் உயிரிழந்தவர்களை, உலக சுகாதார நிறுவன பாதுகாப்பு விதிமுறை களின்படியே அடக்கம் செய்ய முடியும். நோய் தொற்று பரவும் வாய்ப்புள்ள தால், இறந்தவர்களின் நெருங்கிய உறவினர்கள் கூட இறுதிச் சடங்குகளை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக கடந்த ஏப்ரல் மாதம் எங்களுடைய கட்சியின் சார்பில் தமிழகம் முழுவதும் தன்னார்வலர்களை கொண்ட குழு அமைக்கப்பட்டது.

அதன் பின்னர் உலக சுகாதார நிறுவனம் வலியுறுத்தி உள்ள பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்து வருகிறோம்.

ஈரோட்டில் இதுவரை கரோனாவால் உயிரிழந்த 12 பேரின் உடல்களை அவர்களின் மத நம்பிக்கைப்படி, கண்ணியமான முறையில் அடக்கம் செய்து உள்ளோம். இதற்காக நாங்கள் எந்த பணமும் பெறுவதில்லை. சாதி, மதம் பார்க்காமல் செய்கிறோம். எங்களது சேவை தொடர்ந்து நடைபெறும் என்றார்.

SCROLL FOR NEXT