கோப்புப் படம் 
தமிழகம்

மியான்மரில் சிக்கியிருக்கும் மீனவர்களை சிறப்பு விமானத்தில் அழைத்து வரவேண்டும்: வெளியுறவுத் துறையிடம் வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

மியான்மர் நாட்டில் இருக்கும் சென்னை மீனவர்களை சிறப்பு விமானத்தில் அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுவெளியுறவுத் துறை அதிகாரிகளிடம் தமிழக மீன்வளத் துறை அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த ஜூலை 23-ம் தேதி சிவக்குமார், பாபு உள்ளிட்ட 9 மீனவர்கள் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.குறிப்பிட்ட நாளில் கரை திரும்பாததால் இந்திய கடலோர காவல்படையின் மூலம் அவர்களை தேடும் பணி நடந்து வந்தது.

ஒரு மீனவர் மாயம்

சில நாட்களுக்கு முன்பு, மியான்மர் கடற்படையினரால் மீட்கப்பட்ட சென்னை மீனவர்கள், தற்போது அந்நாட்டில் உள்ளனர். அவர்களில், பாபு என்ற மீனவர் படகின் அடியில் இருக்கும் இறக்கையில் சிக்கிய கயிறை அகற்றும் பணியில் ஈடுபட்ட போது கடலில் மாயமாகியுள்ளார். அவரை தேடும் பணிகள் நடந்து வருகின்றன.

இந்நிலையில், மியான்மர் நாட்டில் உள்ள மீனவர்களை சிறப்புவிமானத்தில் அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வெளியுறவுத் துறை அதிகாரிகளுக்கு தமிழக மீன்வளத் துறைஅதிகாரிகள் கடிதம் எழுதியுள்ளனர்.

இது தொடர்பாக, மீன்வளத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

கரோனா பரவல் காரணமாக மியான்மர் நாட்டில் விமான போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கடல் மார்க்கமாக மீனவர்களை அழைத்து வரலாம் என்றால் பருவநிலை சாதமாக இல்லாத சூழல் நிலவி வருகிறது. எனவே, மீனவர்களை சிறப்பு விமானத்தில் அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வெளியுறவுத் துறைக்கு கடிதம் அளித்துள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

          
SCROLL FOR NEXT