பாம்பன் பாலத்தில் வாகனங்களில் மோதி இறந்துகிடக்கும் வண்ணத்துப் பூச்சிகள். 
தமிழகம்

இலங்கையில் இருந்து வலசை வரும் வண்ணத்துப் பூச்சிகளை பாதுகாக்க ராமேசுவரத்தில் பூங்கா அமையுமா?

எஸ்.முஹம்மது ராஃபி

இலங்கையில் இருந்து தமிழகத்துக்கு வலசை வரும் வண்ணத்துப் பூச்சிகளைப் பாதுகாக்க, ராமேசுவரத்தில் வண்ணத்துப் பூச்சி பூங்கா அமைக்க வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வண்ணத்துப்பூச்சிகள் இயற்கையின் வரங்கள். அவைகளாலேயே மிகப்பெரிய காடுகளை உருவாக்கும் மகரந்தச் சேர்க்கை நிகழ்கிறது. ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதத்திலிருந்து அக்டோபர் வரை இலங்கையிலிருந்து 7 வகையான வண்ணத்துப் பூச்சிகள் தமிழகத் துக்கு வலசை வருகின்றன. இவ்வாறு வரும் வண்ணத்துப் பூச்சிகள் தென் மாவட்டங்கள் மற்றும் கேரள வனப்பகுதிகளில் வலம் வருகின்றன.

இலங்கையிலிருந்து தனுஷ் கோடி, ராமேசுவரம் கடல்பகுதி வழியாக தமிழகத்தினுள் சாரை சாரையாக நுழையும் வண்ணத்துப் பூச்சிகள் பாம்பன் பாலத்தைக் கடக்கும் போது வாகனங்களில் மோதி தினமும் ஆயிரக்கணக்கான வண்ணத்துப் பூச்சிகள் இறந்து வருகின்றன.

இது குறித்து இயற்கை ஆர்வலர் தாகிர் சைபுதீன் கூறியதாவது:

தாவரங்களின் மகரந்தச் சேர்க்கைக்கு பல்வேறு பூச்சி இனங்கள் உதவினாலும், வண்ணத்துப் பூச்சிக்கு முக்கியப் பங்குண்டு. நகரமயமாதல் காரணமாக வனப்பகுதிகள் குறைந்து வரும் காலகட்டத்தில் இவற்றை பாதுகாக்கவும், அதன் இனத்தைப் பெருக்கவும், சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், வண்ணத்துப் பூச்சிகளைப் பாதுகாக்க வேண் டியது அவசியம்.

அந்த வகையில் ஆசியாவி லேயே மிகப்பெரிய அளவிலான வண்ணத்துப்பூச்சி பூங்காவை, கடந்த ஆட்சியில், ரங்கம் தொகு திக்குட்பட்ட முக்கொம்புவில் ரூ.9 கோடி செலவில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா அமைத்து தந்தார்.

அதேபோல் இலங்கையிலிருந்து தமிழகத்துக்கு வலசை வரும் வண்ணத்துப் பூச்சிகளை பாதுகாக்கவும், தமிழக வனப்பகுதிகளில் அவற்றின் எண்ணிக்கையை அதிகரிக்கும் விதத்திலும், மாணவர்கள் படித்து அறியும் வகையிலும், உயிர்ச்சூழல் மண்டலத்துக்கு இப்பூச்சிகள் எப்படி உதவுகின்றன என்பதை பொதுமக்களும் அறிந்து கொள்ளும் பொருட்டு ராமேசுவரம் வனப் பகுதியில் வண்ணத்துப்பூச்சி பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

SCROLL FOR NEXT