அகமதாபாத்தில் உள்ள தமிழ்வழிப் பள்ளி தொடர்ந்து செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி குஜராத் முதல்வரிடம் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, குஜராத் முதல்வர் விஜய் ரூபானிக்கு இன்று (செப். 24) எழுதிய கடிதம்:
"குஜராத்தின் அகமதாபாத்தில், புலம் பெயர் ந்த தொழிலாளர்களின் குழந்தைகளுக்குத் தமிழ் வழியில் கல்வி அளித்து வந்த பள்ளி, குறைவான வருகைப்பதிவைக் காரணம் காட்டி, திடீரென மூடப்பட்டிருப்பதை அறிந்து நான் வருத்தப்படுகிறேன். இதனால், தமிழ்க் குழந்தைகள் கல்வி கற்பதற்கு வேறு வழியில்லாமல் நிற்கின்றனர்.
தமிழ் மொழி மிகப்பெரும் வரலாறு மற்றும் கலாச்சாரத்தைக் கொண்ட பண்டைய மொழியாகும். தமிழர்கள் குஜராத்தின் வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றியுள்ளனர், பங்காற்றி வருகின்றனர். குஜராத்தில் உள்ள தமிழ் மொழி சிறுபான்மையினரின் எதிர்காலம் பாதுகாக்கப்பட வேண்டும்.
இதனால், இந்த விஷயத்தில் நீங்கள் நேரடியாகத் தலையிட்டு, தமிழ்வழிப் பள்ளி தொடர்ந்து செயல்பட உரிய உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டும். அகமதாபாத்தில் உள்ள தமிழ்வழிப் பள்ளி தொடர்ந்து செயல்பட ஆகும் மொத்த செலவுகளையும் தமிழக அரசு ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறது.
தமிழ் மொழி சிறுபான்மையினரின் கல்வி உரிமையை குஜராத் அரசு பாதுகாக்கும் என நான் நம்புகிறேன். இந்த விஷயத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என நம்புகிறேன்".
இவ்வாறு முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.