கோவை-சென்னை இடையே அக்டோபர் 1-ம் தேதி முதல் அரசு விரைவுப் பேருந்துகள் இயக்கம் 
தமிழகம்

கோவை-சென்னை இடையே அக்டோபர் 1-ம் தேதி முதல் அரசு விரைவுப் பேருந்துகள் இயக்கம்

க.சக்திவேல்

கோவை-சென்னை இடையே 'இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ்' என்ற பெயரில் அக்டோபர் 1-ம் தேதி முதல் அரசு விரைவுப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறும்போது, "பயணிகளின் வேண்டுகோளுக்கு இணங்க, அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் கோவை-சென்னை இடையே பகல், இரவு நேரங்களில் குளிர்சாதனமில்லா இருக்கை, படுக்கை வசதி கொண்ட பேருந்துகளை வரும் அக்டோபர் 1-ம் தேதி முதல் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த பேருந்துகள் அவிநாசி, பவானி, சேலம், உளுந்தூர்பேட்டை, விழுப்புரம் வழியாக இயக்கப்பட உள்ளன. கோவையில் இருந்து தினந்தோறும் காலை 7 மணி, இரவு 10 மணிக்கு சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்துக்கு இந்தப் பேருந்துகள் புறப்படும். இதே நேரத்தில் சென்னையில் இருந்தும் கோவைக்குப் பேருந்துகள் கிளம்பும்.

இந்தப் பேருந்துகளுக்கான முன்பதிவை tnstc.in என்ற இணையதளம் மூலமாகவும், TNSTC official mobile app என்ற செல்போன் செயலி மூலமாகவும் பயணிகள் மேற்கொள்ளலாம். இந்தப் பேருந்துகளில் பழைய கட்டணமே வசூலிக்கப்படுகிறது" என்றனர்.

SCROLL FOR NEXT