ஒழுக்கமின்மையால் பிரிந்த மனைவிக்கு கணவரின் ஓய்வூதிய பலன்களை பெற உரிமையில்லை என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
திண்டுக்கல்லில் தொழிலாளர் நலத்துறையில் அதிகாரியாக பணிபுரிந்தவர் 2011-ல் இறந்தார். இவர் தனது முதல் மனைவியை நடத்தை சரியில்லை என்று கூறி 1988-ல் நீதிமன்றத்தில் பிரிந்து வாழ அனுமதி பெற்றார். மறு ஆண்டில் இன்னொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.
இந்நிலையில் கணவர் இறந்த நிலையில் அவருக்குரிய பணப்பலன்கள், குடும்ப ஓய்வூதியம் கேட்டு இரண்டாவது மனைவி விண்ணப்பித்தார். இவரது விண்ணப்பத்தை பரிசீலித்த அதிகாரிகள் சட்டப்படி இரண்டாவது மனைவிக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்க முடியாது என்று கூறி, ஓய்வூதியத்தை 3 ஆக பிரித்து மனுதாரரின் இரு மகள்களுக்கும், முதல் மனைவிக்கும் வழங்க உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை ரத்து செய்து 2011 மார்ச் முதல் தனது கணவருக்குரிய ஓய்வூதிய பலன்களை வழங்க உத்தரவிடக்கோரி 2-வது மனைவி உயர் நீதிமன்ற கிளையில் மனுத் தாக்கல் செய்தார்.
இந்த மனுவை நீதிபதி ஆர்.எம்.டி.டீக்காராமன் பிறப்பித்த உத்தரவு:
மனுதாரருக்கு நடைபெற்ற திருமணம் சட்டப்பூர்வமானது அல்ல. இதனால் மனுதாரர் மனைவி என்ற அந்தஸ்தைப் பெற முடியாது. 2-வது மனைவி என்ற அடிப்படையில் மனுதாரருக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்க முடியாது என உத்தரவிட்டது சரியானது தான்.
நீதிமன்றத்தில் சட்டப்படி பிரிந்து வாழ உத்தரவு பெற்ற முதல் மனைவி, கணவரின் ஓய்வூதியத்தை பெற தகுதியானவர் தான். அதே நேரத்தில் பிரிந்து வாழ நீதிமன்றம் அனுமதி வழங்குவதற்கு, அவரின் ஒழுக்கமற்ற நடத்தை காரணமாக இருந்திருக்கக்கூடாது.
ஒழுக்கமின்மையால் பிரிந்த மனைவி தமிழ்நாடு ஓய்வூதிய விதிகளின்படி கணவனின் ஓய்வூதியத்தை பெறத் தகுதியானவர் இல்லை. அந்த அடிப்படையில் முதல் மனைவியும் ஓய்வூதியம் பெற தகுதியற்றவர்.
இதனால் ஓய்வூதியத்தை 3 ஆக பிரித்து வழங்கும் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. ஓய்வூதிய பலன்கள் அனைத்தையும் மனுதாரரின் 2 மகள்களுக்கு சரிசமமாக பிரித்து வழங்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.