தமிழகம்

வடகிழக்குப் பருவமழை ஆயத்தப் பணிகள்: அனைத்துத் துறை உயர் அலுவலர்களுடன் தலைமைச் செயலர் ஆலோசனை

செய்திப்பிரிவு

வடகிழக்குப் பருவமழை குறித்த ஆயத்தப் பணிகள் தொடர்பாக சம்பந்தப்பட்ட அனைத்துத் துறை உயர் அலுவலர்களுடன் தலைமைச் செயலாளர் சண்முகம் தலைமையில் விரிவான ஆய்வுக் கூட்டம் இன்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.

தலைமைச் செயலாளர் சண்முகம், இன்று தலைமைச் செயலகத்தில் அனைத்துத் துறைச் செயலாளர்கள், சம்மந்தப்பட்ட துறைத் தலைவர்கள், விமானப்படை, கடலோரக் காவல் படை, தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் ஆகியோருடன் அக்டோபர் மாதம் தொடங்க உள்ள வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.

இதுகுறித்து தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

* பேரிடர் காலங்களில் மீட்பு மற்றும் மறுசீரமைப்புப் பணிகளில் ஈடுபடும் பல்வேறு துறை அலுவலர்களது செயல்திறன்களை மேம்படுத்த அரசு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தலைமைச் செயலாளர் தலைமையில் பல்வேறு துறைச் செயலாளர்களுடன் விவாதிக்கப்பட்டது.

* பேரிடர் காலங்களில் நடத்தப்படும் மாதிரிப் பயிற்சிகள் (Mock Dril) சமூக இடைவெளியைப் பயன்படுத்தி 50 பேருக்கு மிகாமல் பயிற்சி அளிக்க கேட்டுக் கொள்ளப்பட்டது.

* பேரிடர் காலங்களில் கரோனா பரவலைத் தடுக்க பொதுமக்கள் குறிப்பாக அனைவரும் வெளியில் செல்லும்போதும், பொது இடத்தில் தங்க வைக்கும்போதும், பயணிக்கும்போதும் முகக்கவசம் கட்டாயமாக அணிந்துகொள்ள வேண்டும்.

* தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும்.

* கூட்டம் கூடுதலைத் தவிர்க்க வேண்டும்.

*பொதுமக்களுக்கு பேரிடர் காலத்தில் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வு கையேடுகள், குறும்படங்கள் மற்றும் ஒலி, ஒளிப் பதிவுகள் மூலம் விழிப்புணர்வுகள் ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளுதல்.

* ஏற்கெனவே கண்டறிந்து வைத்துள்ள நிவாரண முகாம்கள் சமூக இடைவெளியுடன் தங்கவைக்கப் போதுமானதாக உள்ளதா என ஆய்வு செய்து, தேவைப்படின் நிவாரண முகாம்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

* வடகிழக்குப் பருவமழை தொடங்குவதற்கு முன்பு 37 மாவட்டத்திற்கும் நியமிக்கப்பட்டுள்ள இந்திய ஆட்சிப் பணி கண்காணிப்பு அலுவலர்கள் மற்றும் சென்னை மாநகரின் 15 மண்டலங்களுக்கும் நியமிக்கப்பட்டுள்ள கண்காணிப்பு அலுவலர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மாவட்டங்கள் மற்றும் மண்டலங்களில் மேற்கொள்ளப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஆயத்தப் பணிகளைக் கண்காணித்து அறிக்கை அளிக்க கேட்டுக் கொள்ளப்பட்டது.

* மேலும், பேரிடர் காலங்களில் தகவல் தொடர்பினை துரிதப்படுத்த முன்னெச்சரிக்கை கருவிகள் ((EWS) பேரிடர் குறித்த அறிவிப்புக் கருவி மற்றும் TN-SMART என்ற மென்பொருள் ஆகியவை கொண்டு அவசர மீட்பு முன்னெச்சரிக்கை பணிகளுக்குப் பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டது.

* உலக வங்கியின் உதவியுடன் செயல்படுத்தப்பட்டு வரும் கடலோர அபாயக் குறைப்பு திட்டத்தின் முன்னேற்றம் குறித்து விவாதிக்கப்பட்டது.

* கஜா மற்றும் வார்தா புயலில் ஏற்பட்ட பாதிப்புகளால் நமக்கு ஏற்பட்ட அனுபவங்கள் அடிப்படையில் கடலோர மாவட்டங்களில், வானிலை ஆய்வு மையம் மற்றும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை மூலம் அறிவுறுத்தப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சியர்கள் பின்பற்றிட கேட்டுக்கொள்ளப்பட்டது.

* வடகிழக்குப் பருவமழை காலத்தில் பொருட் சேதம் மற்றும் உயிர்ச்சேதம் ஏற்படாமல் தவிர்க்கவும், குறைக்கவும் அனைத்துத் துறையினைச் சார்ந்த செயலாளர்களும், துறைத் தலைவர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

* மாநில மற்றும் மாவட்ட அவசரகால கட்டுப்பாட்டு மையம், TN-SMART செயலி மற்றும் சமூக வலைதளம், மின்னணு மற்றும் அச்சு ஊடகங்கள் மூலம் பொதுமக்களுக்கு வடகிழக்குப் பருவமழை குறித்த தகவல்கள் தெரிவிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

* மீட்புக் குழுக்கள் குறுகிய கால அளவில் பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சென்றடைய ஏதுவாக, தேவையான உபகரணங்களுடன் தயார் நிலையில் இருக்க வேண்டும்.

* வடகிழக்குப் பருவமழை காலத்தில் வருவாய்த் துறை, பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலைத் துறை, வேளாண்மைத் துறை, ஊரக வளர்ச்சித் துறை, நகராட்சி நிர்வாகம், மாநகராட்சி, சுகாதாரத் துறை, காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை, மீன்வளத் துறை, உணவுப் பொருள் வழங்கல் துறை மற்றும் சம்பந்தப்பட்ட துறைத் தலைவரும் ஒருங்கிணைந்து செயல்பட தலைமைச் செயலாளர் கேட்டுக் கொண்டார்”.

இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT