கரோனா மருத்துவமனை கழிப்பறையை நவீன இயந்திரம் கொண்டு புதுச்சேரி சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் சுத்தம் செய்து பார்த்தார்.
புதுச்சேரி கதிர்காமத்தில் இந்திராகாந்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, கோவிட் மருத்துவமனையாக உள்ளது. இங்கு ஆக்சிஜன் கருவிகள் அமைக்கும் பணியை சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் இன்று (செப்.18) பார்வையிட்டார்.
அதைத் தொடர்ந்து, பாதுகாப்பு உடை அணிந்து கரோனா வார்டுக்குச் சென்று, அங்கு சிகிச்சை பெற்று வரும், தொற்றாளர்களை நேரில் சந்தித்து, அவர்களிடத்தில், சிகிச்சைக்கான மருந்து, உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்துக் கேட்டறிந்தார்.
அப்போது சில நோயாளிகள் கழிப்பறை சுத்தமாக இல்லை என்று புகார் தெரிவித்தனர். அதற்கு, "புதிதாகக் கருவி வாங்கப்பட்டுள்ளது. இனி இப்பிரச்சினை இருக்காது" என அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் பதிலளித்தார்.
கரோனா மருத்துவமனை கழிப்பறைக்குள் சென்று சுகாதாரப் பணியாளர்கள் தூய்மை செய்ய வேண்டியுள்ளதால், நோய்த்தொற்று அச்சத்தில் இருந்தனர். தற்போதைய தருவி மூலம் தொலைவில் இருந்தே கழிப்பறையைத் தூய்மைப்படுத்த முடியும் என்று மருத்துவமனை நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், மருத்துவமனையில் உள்ள கழிப்பறைகளை ஆய்வு செய்தார். அங்கு உள்ள கழிப்பறைகளைச் சுத்தப்படுத்த வாங்கப்பட்டுள்ள புதிய கருவியைக் கொண்டு கழிப்பறைகளைச் சுத்தப்படுத்தினார்..இதேபோல் சுத்தம் செய்ய ஊழியர்களை அமைச்சர் அறிவுறுத்தினார்.
இதையடுத்து, அனைத்து அரசு மருத்துவமனைகளுக்கும் இதுபோன்று கழிப்பறைகளைச் சுத்தப்படுத்தும் நவீன கருவிகளை வாங்கிப் பயன்படுத்தலாம் என்று சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் அறிவுறுத்தினார்.