பிரதிநிதித்துவப் படம் 
தமிழகம்

புதுச்சேரியில் 18 வயதுப் பெண் உட்பட 13 பேர் கரோனா தொற்றுக்கு உயிரிழப்பு; புதிதாக 323 பேர் பாதிப்பு; இறப்பு 2.01 சதவீதமாக உயர்வு

அ.முன்னடியான்

புதுச்சேரியில் இன்று புதிதாக 323 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், மேலும் 18 வயது இளம்பெண் உட்பட 13 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2.01 சதவீதமாக உயர்ந்துள்ளது.

இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமார் இன்று (செப். 17) கூறும்போது, "புதுச்சேரியில் 4,867 பேருக்குக் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரியில் 216, காரைக்காலில் 68, ஏனாமில் 30, மாஹேவில் 9 என மொத்தம் 323 பேருக்குத் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமார்: கோப்புப்படம்

மேலும், புதுச்சேரியில் 10 பேர், காரைக்காலில் 3 பேர் என 13 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 431 ஆக உயர்ந்துள்ளது. இறப்பு விகிதம் 2.01 சதவீதமாக உள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 21 ஆயிரத்து 428 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவற்றில் புதுச்சேரியில் 2,584 பேர், காரைக்காலில் 394 பேர், ஏனாமில் 129 பேர், மாஹேவில் 15 பேர் என 3,122 பேர் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அதேபோல், புதுச்சேரியில் 1,265 பேர், காரைக்காலில் 111 பேர், ஏனாமில் 212 பேர், மாஹேவில் 34 பேர் என மொத்தம் 1,622 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் மூலம் புதுச்சேரி மாநிலத்தில் தற்போது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் உட்பட மொத்தமாக 4,744 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இன்று புதுச்சேரியில் 317 பேர், ஏனாமில் 10 பேர், மாஹேவில் 3 பேர் என மொத்தம் 330 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 16 ஆயிரத்து 253 (75.85 சதவீதம்) அதிகரித்துள்ளது.

இதுவரை 1 லட்சத்து 19 ஆயிரத்து 720 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதில் 92 ஆயிரத்து 383 பரிசோதனைகளுக்கு 'நெகட்டிவ்' என்று முடிவு வந்துள்ளது" எனத் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT