தமிழகம்

கூட்டுறவு சங்கம் மூலம் மீண்டும் விவசாயக் கடன்: தமிழக முதல்வருக்கு பி.ஆர்.பாண்டியன் நன்றி

செய்திப்பிரிவு

தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கங்கள் மூலம் மீண்டும் விவசாயக் கடன் வழங்கத் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தமைக்கு, தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் நன்றி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்ட அறிக்கை:

''தமிழகத்தில் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கங்களை முடக்கும் உள்நோக்கத்தோடு மத்தியக் கூட்டுறவு வங்கிகளில் மிரர் அக்கவுண்ட் தொடங்கி அங்குதான் விவசாயிகள் பயிர்க் கடன் பெற்றுக்கொள்ள வேண்டும் என மத்திய அரசு உத்தரவு பிறப்பித்து இருந்தது. அதையே தமிழக அரசின் கூட்டுறவுத் துறைப் பதிவாளரும் பிரதிபலித்தார். இதனால் இந்த ஆண்டு விவசாயிகள் பயிர்க் கடன் பெறுவது காலதாமதம் ஆகிக் கொண்டிருந்தது. இதனால் சாகுபடி தொடங்கியும் அதற்கான செலவுகளுக்கு விவசாயிகள் சிரமப்பட்டு வந்தனர்.

மத்திய - மாநில அரசுகளின் இந்த உத்தரவை எதிர்த்து தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் சார்பில் போராட்டத்தில் ஈடுபட்டோம். கடந்த மாதம் திருவாரூரில் நடந்த விவசாயிகள் கலந்துரையாடல் கூட்டத்திலும் முதல்வரிடம் எழுத்துபூர்வமாகக் கடிதம் கொடுத்து விளக்கினோம். அதனை ஏற்றுக்கொண்டு பழைய முறையில் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கங்கள் மூலம் பயிர்க் கடன் வழங்க முதல்வர் உத்தரவிட்டார்.

இதையடுத்து கடந்த 15-ம் தேதி கூட்டுறவுப் பதிவாளர் பிறப்பித்த உத்தரவில் வேளாண் கூட்டுறவு சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு உடனடியாகக் கடன் வழங்கவும், கேசிசி கார்டு வழங்கி விவசாயிகளுக்கு விழிப்புணர்வு முகாம்கள் நடத்தவும் ஆணையிட்டுள்ளார். எங்களது கோரிக்கையை ஏற்று உடனடி நடவடிக்கை எடுத்த முதல்வர், கூட்டுறவுத் துறை அமைச்சர் மற்றும் உயர் அலுவலர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

அதேநேரத்தில் உடனடியாகக் கூட்டுறவு சங்கத் தலைவர்கள், செயலாளர்கள் தங்கள் வங்கிகளில் பழைய முறையில் கடன் வழங்கவும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்".

இவ்வாறு பி.ஆர்.பாண்டியன் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT