தமிழகம்

செல்லப் பூனைக்கு வளைகாப்பு நடத்திய பெண்: 4 குட்டிகளை அழகாய் ஈன்றது

செய்திப்பிரிவு

புதுச்சேரி மாநிலம் மூலக்குளத்தில் வசந்தா என்பவர் வசித்து வருகிறார். இவர், தனது வீட்டில் செல்லப் பிராணியாக பூனை ஒன்றை கடந்த ஓராண்டாக வளர்த்து வருகிறார்.

செல்லப்பிராணிக்கு ‘கேட்டி’ என்று பெயரிட்டிருந்தார். வீட்டில் செல்லமாக வலம் வந்த பூனை ‘கேட்டி’ கருவுற்றது.

அவ்வபோது கேட்டியுடன் விளையாடும் வசந்தாவின் பேத்திகள் தாருணிகா, சார்மிதா ஆகியோர், கேட்டிக்கு விழா நடத்த விரும்பினர்.

வசந்தாவும் பூனை கேட்டியை தனது மகளாக கருதி அதற்கு கடந்த திங்களன்று வளைகாப்பு நடத்தியுள்ளார். பூனை ‘கேட்டி’க்கு மாலையிட்டு, 7 வகையான தட்டுகளில் நலங்கு பொருட்கள், பூனைக்கு பிடித்த உணவுகளை வைத்து இந்த வளைகாப்பை நடத்தியுள்ளார்.

இதைத் தொடர்ந்து, கடந்த செவ்வாயன்று அந்தப் பூனை அழகாக 4 குட்டிகளை ஈன்றது.

வளைகாப்பு நிகழ்வு மற்றும் தற்போது குட்டிகளுடன் உள்ள பூனை ‘கேட்டி’ இரண்டையும் வசந்தாவின் மகன் கந்தன் வீடியோ எடுத்து சமூக வலை தளத்தில் வெளியிட, அது வைரலாகி வருகிறது.

“தாயும், சேய்களும் நலமாக இருக்கிறார்கள்” என்று பூரிப்புடன் கூறுகிறார் வசந்தா.

SCROLL FOR NEXT