நிர்வாக வசதிக்காக இரண்டாகப் பிரிக்கப்படும் அண்ணா பல்கலைக்கழகத்தை கல்விக் கண் திறந்த காமராஜர் பிறந்த விருதுநகரில் தொடங்க வேண்டுமென இளைஞர் காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து தமிழக முதல்வருக்கு விருதுநகர் கிழக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் மீனாட்சிசுந்தரம் கோரிக்கை அனுப்பியுள்ளார்.
அக்கடிதத்தில், "பெருந்தலைவர் காமராஜர் பிறந்த விருதுநகர் மாவட்டத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தை தொடங்கினால் அது காமராஜர் புகழுக்கு பெருமை சேர்க்கும்.
1977-ல் அருப்புக்கோட்டை தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்று எம்.ஜி.ஆர். தமிழக முதல்வர் ஆனாது வரலாற்றுச் சிறப்பும் விருதுநகர் மாவட்டத்திற்கு உண்டு.
மேலும், பட்டாசு, தீப்பெட்டி, அச்சு, நெசவு மற்றும் விவசாய கூலித் தொழிலை மட்டுமே நம்பியுள்ள மாவட்டம் விருதுநகர் மாவட்டம்.
தென் மாவட்டங்களில் ஒன்றான விருதுநகர் மாவட்டத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் ஒரு பகுதியை தொடங்குவது கூலித் தொழிலாளர்களின் வீட்டுப் பிள்ளைகள் உயர்கல்வி பயில அதிக வாய்ப்பைக் கொடுக்கும். அதோடு, தென் மாவட்டங்களின் வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருக்கும்". எனக் குறிப்பிட்டுள்ளார்.