இளைஞரைக் கொடூரமாகத் தாக்கி தற்கொலைக்கு தூண்டியதாக, சிவகிரி காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி தென்காசி எஸ்.பி அலுவலகத்தை உறவினர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
தென்காசி மாவட்டம், சிவகிரி, வ.உ.சி. நகரைச் சேர்ந்த குமார் என்பவரது மகன் அஜித் (22). இவர், மாடு மேய்த்து பால் வியாபாரம் செய்து வருகிறார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு, சிவகிரி காவல் ஆய்வாளர் தன்னைத் தாக்கியதாகக் கூறி, விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதையடுத்து அவர், தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில், அஜித்தை தாக்கிய காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அவரது உறவினர்கள் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அஜித்தின் தந்தை குமார் புகார் மனு அளித்தார்.
அந்த மனுவில், “கடந்த 11-ம் தேதி இரவு எனது மகன் இரவு உணவு வாங்கிக்கொண்டு வீட்டுக்கு வந்துகொண்டு இருந்தார். சிவகிரி திரவுபதி அம்மன் கோயில் அருகே வந்தபோது, காவல் ஆய்வாளர் சுரேஷ்குமார் எனது மகனை அழைத்துள்ளார்.
உன் மீது ஏற்கெனவே கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வழக்கு இருப்பதால் என் கண்முன் வரக் கூடாது என்று கூறியும் ஏன் வந்தாய் என்று கேட்டு கொடூரமாகத் தாக்கியுள்ளார்.
இனிமேல் உன்னை ஊருக்குள் பார்த்தால் கொன்றுவிடுவேன் என்றும் கூறி மிரட்டியுள்ளார். வீட்டுக்கு வந்த எனது மகன், காவல் ஆய்வாளர் தாக்கியதால் ஏற்பட்ட காயத்துக்கு மருந்து போட்டுக்கொண்டார். காவல் ஆய்வாளர் தொடர்ந்து கொடுமைப்படுத்துவதாகக் கூறி கதறி அழுதார்.
பின்னர், சில மணி நேரம் கழித்து அருகில் உள்ள கண்மாய் அருகே எனது மகன் விஷம் குடித்துவிட்டதாக தகவல் அறிந்தோம். உடனடியாக, தனியார் மருத்துவமனையில் சேர்த்தோம்.
பின்னர், தென்காசி அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எனது மகனை கொடூரமாகத் தாக்கி தற்கொலைக்கு தூண்டிய காவல் ஆய்வாளர் சுரேஷ்குமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.