நாகையில் அரசு சட்டக் கல்லூரி அமைப்பது குறித்துப் பரிசீலிக்கப்படும் என தமிழக சட்ட அமைச்சர் சி. வி. சண்முகம் தெரிவித்துள்ளார்.
இன்று தமிழக சட்டப் பேரவையில் கேள்வி நேரத்தின்போது நாகை சட்டப்பேரவை உறுப்பினர் மு.தமிமுன் அன்சாரி நாகப்பட்டினத்தில் சட்டக் கல்லூரி தொடங்க அரசு ஆவன செய்யுமா என்று கேள்வி எழுப்பினார்.
''நாகப்பட்டினம் என்பது காவிரி டெல்டா மாவட்டங்களில் முக்கிய நகரமாகும். ஐம்பெரும் தமிழ்க் காப்பியங்களில் இடம்பெற்ற ஊராகும். ஆங்கிலேயர்கள் காலத்திலும் முக்கிய நகரமாக இருந்தது. சோழ மன்னர்கள் இங்கிருந்துதான் தென்கிழக்கு ஆசியாவை வெற்றி கொள்ளப் புறப்பட்டார்கள். எனவே, முக்கியத்துவம் வாய்ந்த நாகப்பட்டினம் நகரில் டெல்டா மாவட்ட மக்கள் பயனடையும் வகையில் ஒரு சட்டக் கல்லூரி அமைப்பது குறித்துப் பரிசீலிக்க வேண்டும்'' எனத் தமிமுன் அன்சாரி தமிழக சட்டப்பேரவையில் இன்று கோரிக்கை வைத்தார்.
இதற்குப் பதிலளித்த சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் ''இது குறித்து அரசு பரிசீலிக்கும்'' என்றார். மேலும், ''தனியார் யாரேனும் அங்கு சட்டக் கல்லூரி அமைக்க முன் வந்தால் அதற்கு அனுமதி அளிப்பது குறித்தும் பரிசீலிக்கப்படும்'' என்றார்.
அப்போது எழுந்த தமிமுன் அன்சாரி, ''பரிசீலிக்கப்படும் என்றதற்கு நன்றி. நீங்கள் கூறிய இரண்டு கனிகளும் இனிக்கின்றன. ஆயினும் முதலில் கூறிய கனியே அதிகம் இனிப்பதால், அதையே தருவது குறித்துப் பரிசீலிக்க வேண்டும்'' என்று கேட்டுக் கொண்டார்.
இதுகுறித்து 'இந்து தமிழ் திசை'யிடம் தமிமுன் அன்சாரி கூறும்போது, ''தனியார் சட்டக் கல்லூரி தொடங்க முன்வந்தாலும், அதில் கட்டணம் அதிகம் இருக்கும் என்பதால் ஏழை மாணவர்கள் அங்கு கட்டணம் செலுத்தி, சட்டம் படிக்கச் சிரமப்படுவார்கள். அரசு சார்பில் சட்டக் கல்லூரி தொடங்கினால்தான் குறைவான கட்டணத்தில் எளியவர்களும் படிக்க முடியும் என்பதால், அதையே தருவது குறித்துப் பரிசீலிக்குமாறு வலியுறுத்தினேன்'' என்று தெரிவித்தார்.