மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தை அரசுடமையாக்கிய அவசரச் சட்டத்தை எதிர்த்துத் தொடர்ந்த வழக்கை அவசரமாக விசாரிக்க வேண்டும் என்ற தீபக் தரப்பின் கோரிக்கையை ஏற்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த வேதா நிலையத்தை நினைவு இல்லமாக மாற்றுவது, அதை அரசுடமையாக்குவது தொடர்பாக தமிழக அரசு அவசரச் சட்டம் பிறப்பித்தது. இதை எதிர்த்து ஜெயலலிதாவின் வாரிசு என அறிவிக்கப்பட்ட தீபா, தீபக் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
இந்த வழக்கை அவசர வழக்காக நாளை விசாரிக்க அனுமதிக்கும்படி சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி , நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் தீபக் தரப்பு வழக்கறிஞர் முறையிட்டார்.
அப்போது, சட்டப்பேரவைக் கூட்டம் நடைபெறுவதால் அவசரச் சட்டம், சட்டமாக நிறைவேற்றக்கூடும் என்பதால் அந்த வழக்கை விசாரிக்க வேண்டுமெனக் கோரிக்கை வைத்தார்.
அவசர வழக்காக விசாரணைக்குப் பட்டியலிட வாய்ப்பில்லை எனத் தெரிவித்த நீதிபதிகள், ஒருவேளை சட்டமாக இயற்றப்பட்டால் அதனை எதிர்த்து வழக்குத் தொடரும்படி தீபக் தரப்பிற்கு அறிவுறுத்தினர்.