இரா.முத்தரசன்: கோப்புப்படம் 
தமிழகம்

பிரதமர் கிசான் திட்ட மோசடி குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும்; முத்தரசன்

செய்திப்பிரிவு

பிரதமர் கிசான் திட்ட மோசடி குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக, இரா.முத்தரசன் இன்று (செப். 9) வெளியிட்ட அறிக்கை:

"பிரதமரின் கிசான் திட்டத்தில் மிகப்பெரும் மோசடி நடைபெற்றிருப்பது வெளியாகியுள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்திய தொடக்க நிலையிலேயே உண்மையான விவசாயிகள் விடுபட்டுள்ளனர். போலி விவசாயிகள் சேர்க்கப்படுகின்றனர் என்ற புகார் எழுந்தது. அப்போது அரசு புகாரை மறுத்து, அலட்சியப்படுத்தியது. இப்போது 6 லட்சம் போலி விவசாயிகள் பிரதமர் கிசான் திட்டத்தில் சேர்க்கப்பட்டிருப்பது, மறைக்க முடியாமல் வெளியாகியுள்ளது.

நேர்மையான விசாரணை நடத்தப்பட்டால் இந்த எண்ணிக்கை இன்னும் மிகப் பெரும் அளவில் அதிகரிக்கும் என்பதே உண்மையாகும்.

அரசின் திட்டத்தை உரியவர்களிடம் சேர்க்க வேண்டிய, சட்டரீதியான கடமைப் பொறுப்புள்ள அதிகாரிகளே, பயிரை மேயும் வேலிகளாகியிருப்பது மிகவும் கேவலமானது. ஆட்சியாளர்கள் ஊழலில் முழ்கி கிடப்பதால், இது அதிகாரிகள் மட்டுமே தன்னிச்சையாக செய்த மோசடியாக கருத முடியாது. இது தொடர்பான விசாரணை அதிகாரிகளை பலி கொடுத்து, ஆட்சியாளர்களை காப்பற்றுவதாக அமைந்துவிடக்கூடாது.

இந்த மோசடியில் சம்பந்தப்பட்ட 80-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் பணி நீக்கம் செய்யப்பட்டிருப்பதாகவும், 18 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன் இந்த மோசடிக்கு ஊக்கம் கொடுத்த சக்தி எது? இதில் அதிகார மையத்தின் தொடர்புகள் என்ன? என்பது போன்ற பல முனைகளிலும் விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும்.

மாநிலம் முழுவதும் பயனடைந்துள்ள விவசாயிகளின் உண்மைத் தன்மை குறித்து விரிவாக விசாரிக்க வேண்டும். மோசடியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு திட்ட நிதி கிடைக்கச் செய்ய வேண்டும்.

அதிகாரிகள் மூலம் மோசடி செய்யப்பட்ட பணத்தை அவர்களிடமே வசூலிக்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது"

இவ்வாறு இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT