தமிழகம்

ரூ.300 கோடி நிதி நிறுவன மோசடி வழக்கை பொருளாதார குற்ற பிரிவுக்கு மாற்றி டிஜிபி உத்தரவு

செய்திப்பிரிவு

சென்னையைச் சேர்ந்த நீதிமணி, இவரது மனைவி மேனகா மற்றும் ராமநாதபுரத்தைச் சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியர் ஆனந்த் ஆகியோர், புல்லியன் பின்டெக் என்ற நிதி நிறுவனத்தை நடத்தினர். இதில் நூற்றுக்கணக்கான ஆசிரியர்கள் கோடிக்கணக்கான ரூபாயை முதலீடு செய்துள்ளனர். இந்நிலையில், கடந்த மார்ச் மாதம் முதல் முதலீட்டாளர்களுக்கு பணம் தரவில்லை.

இதுகுறித்து, ராமநாதபுரத்தைச் சேர்ந்த துளசி மணிகண்டன், காரைக்குடி ஆசிரியை கற்பகவல்லி ஆகியோர் போலீஸில் புகார் அளித்தனர். இதையடுத்து ஆசிரியர் ஆனந்த், நீதிமணி, மேனகா ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் ராமநாதபுரத்தைசேர்ந்த பிரவீன் சக்கரவர்த்தி என்பவர், புல்லியன் பின்டெக் நிதி நிறுவனத்தில் ரூ. 300 கோடி வரை மோசடி நடந்துள்ளதாகவும், இதில் சாதாரண பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளதாகவும் இவ்வழக்கை பொருளாதாரக் குற்றப்பிரிவுக்கு மாற்ற வேண்டும் என உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.

இந்நிலையில் இவ்வழக்குகளின் தன்மை கருதி இவற்றை பொளாதார குற்றப்பிரிவுக்கு மாற்ற மாவட்ட எஸ்.பி. காவல்துறை இயக்குநருக்கு கடிதம் எழுதி இருந்தார். அதனடிப்படையில் இந்த 2 வழக்குகளும் பொருளாதாரக் குற்றப்பிரிவுக்கு மாற்றி தமிழக டிஜிபி ஜே.கே. திரிபாதி நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.

SCROLL FOR NEXT