தமிழகம்

நீட் முறைகேடு மாணவர்களின் மாற்றுச் சான்றிதழ்களை வழங்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை மறுப்பு: 10, 12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்களை மட்டும் வழங்க உத்தரவு

கி.மகாராஜன்

நீட் தேர்வில் முறைகேடு செய்த மாணவர்கள் இருவரின் மாற்றுச் சான்றிதழ்களை வழங்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை மறுத்துவிட்டது. அதேவேளையில் அவர்களில் 10, 12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்களை மட்டும் வழங்க உத்தரவிட்டுள்ளது.

சென்னையைச் சேர்ந்த மாணவர் உதித் சூர்யா உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஒரு மனுவினைத் தாக்கல் செய்திருந்தார்.

அதில்," கடந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் முறைகேடு செய்ததாக சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்து, குற்றவாளியாக சேர்த்து விசாரித்தனர்.

வழக்கின் பல்வேறு கட்ட விசாரணைகள் முடிந்து, உயர்நீதிமன்ற மதுரைக்கிளையின் உத்தரவின்படி நான் ஜாமீனில் உள்ளேன். இந்த வழக்கு விசாரணையின்போது எனது 10 மற்றும் 12ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள், பள்ளி மாற்றுச் சான்று மற்றும் சாதி சான்றிதழ் ஆகிய அனைத்து உண்மைச் சான்றிதழ்களையும் காவல்துறையினர் கைப்பற்றிய நிலையில், தற்போது நீதித்துறை நடுவரிடம், சமர்ப்பிக்கப்பட்ட பறிமுதல் செய்யப்பட்ட ஆவணத்தோடு, இணைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கல்லூரியில் இணைந்து கலை மற்றும் அறிவியல் படிப்பில் சேர சென்ற நிலையில், உண்மைச் சான்றிதழ்களை கேட்கின்றனர்.

எனவே எனது எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, நீதிமன்றத்தில் இருக்கும் உண்மைச்சான்றிதழ்களை வழங்க உத்தரவிட வேண்டும். இதில் நீதிமன்றம் விதிக்கும் அனைத்து நிபந்தனைகளையும் பின்பற்ற தயாராக உள்ளேன்"என கூறியிருந்தார்.

இதே கோரிக்கையை வலியுறுத்தி, மற்றொரு மாணவரும் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி பொங்கியப்பன், மாணவர்கள் இருவரும் வழக்கு விசாரணைக்கு தேவைப்படும் பட்சத்தில் சான்றிதழ்களை வழங்குவோம் என தேனி நீதித்துறை நடுவரிடம் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்து 10,12ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்களை மட்டும் பெற்றுக்கொள்ளலாம் என உத்தரவிட்ட நீதிபதி, மாணவர்கள் பயின்ற கல்லூரிகளில் விண்ணப்பித்து, கல்லூரி நிர்வாகம் வழங்கினால், மாற்றுச் சான்றிதழை பெற்றுக்கொள்ளலாம்.

இல்லையெனில் வழக்கு விசாரணை முடிந்தவுடன் பெற்றுக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT