தமிழகம்

அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தில் குறைபாடுகளை உடனடியாக சரி செய்ய வேண்டும்: அரசுக்கு 4 வாரம் அவகாசம் அளித்து நீதிமன்றம் உத்தரவு

செய்திப்பிரிவு

சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தில் உள்ள குறைபாடுகளை உடனடியாக சரி செய்ய வேண்டும். அதற்காக அரசுக்கு 4 வாரம் அவகாசம் அளித்து சென்னை உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

திமுக ஆட்சியில் சென்னை கோட்டூர்புரத்தில் அண்ணா நூற் றாண்டு நினைவு நூலகம் கட்டப் பட்டு 2010-ம் ஆண்டு திறக்கப் பட்டது. தமிழ், ஆங்கிலம் உட்பட பல்வேறு மொழிகளில் வெவ் வேறு துறைகளைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான புத்தகங் கள் இருந்தன. ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு இந்த நூலகம் சரிவர பராமரிக்கப்படவில்லை என்று புகார் கூறப்பட்டது. இதுதொடர்பாக பேராசிரியை மனோன்மணி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் கொண்ட முதல் அமர்வு இவ்வழக்கை விசாரித்து, வழக்கறிஞர்கள் பி.டி ஆஷா, எம்.சுந்தர் ஆகியோர் கொண்ட குழுவை நியமித்து, நூலகத்தை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.

இந்தக் குழு அறிக்கையை பார்த்த நீதிபதிகள், “நூலகத்தைப் பராமரிக்கத் தேவைப்படும் பணிகளை அதிகாரிகள் விரைவாகச் செய்ய வேண்டும். இந்த உத்தரவை நிறைவேற்றியதற்கான அறிக் கையை அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15-ம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.

இந்நிலையில் இவ்வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் ஆஜரானார். அப்போது குழுவின் அறிக்கையை நடைமுறைப்படுத்தியது தொடர் பாக அரசு சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதையடுத்து உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் கொண்ட முதல் அமர்வு பிறப்பித்த உத்தரவு:

நீதிமன்ற உத்தரவை நடை முறைப்படுத்தியது தொடர்பான அரசு அறிக்கையைப் பார்க் கும்போது இன்னும் பல நடவடிக் கைகள் எடுக்க வேண்டியுள்ளது என்பது தெரிகிறது.

இப்பணிகளைச் செய்து முடிக்க ஐந்தாண்டு திட்டம் தேவைப்படுவதாக நாங்கள் கருதுகிறோம். அவசரமாக இப்பணிகளை செய்து முடிக்க வேண்டும். அதற்காக அரசுக்கு நான்கு வார காலஅவகாசம் அளிக்கப்படுகிறது.

இதற்கிடையே, நீதிமன்றம் நியமித்த குழு, அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தில் மேற்கொள்ளப்படும் பணிகளில் ஏற்படும் முன்னேற்றம் குறித்து எப்போது வேண்டுமானாலும் போய் ஆய்வு செய்யலாம் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை அக்டோபர் 29-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

SCROLL FOR NEXT