காயமடைந்த மீனவர்கள். 
தமிழகம்

வேதாரண்யம் மீனவர்கள் மீது நடுக்கடலில் தாக்குதல்: இலங்கை மீனவர்களா?- போலீஸார் விசாரணை

கரு.முத்து

வங்கக் கடலில் கோடியக்கரை அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த ஆறுகாட்டுத்துறையைச் சேர்ந்த 4 மீனவர்கள் மீது, நேற்று மாலை படகில் வந்த மர்ம நபர்கள் சிலர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

வேதாரண்யம் அருகேயுள்ள ஆறுகாட்டுத்துறையைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவருக்குச் சொந்தமான ஃபைபர் படகில், அதே ஊரைச் சேர்ந்த கோபி, வேலவன், சுகுமாரன், காளிதாஸ் ஆகிய நான்கு மீனவர்கள் வெள்ளிக்கிழமை கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர்.

நேற்று மாலை கோடியக்கரைக்குத் தென்கிழக்கே நடுக்கடலில் அவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு ஒரு படகில் வந்த மர்ம நபர்கள் திடீரென அவர்களைக் கடுமையாகத் தாக்கினர். அத்துடன் 600 கிலோ எடையுள்ள மீன்பிடி வலைகள் மற்றும் உபகரணங்களையும் கொள்ளையடித்துச் சென்றனர்.

தாக்குதலில் காயமடைந்த மீனவர்கள் இன்று அதிகாலை கரைக்குத் திரும்பினர். அவர்களில் இரும்புக் கம்பியால் தாக்கப்பட்டு தலையில் காயமடைந்த மீனவர் கோபி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தாக்குதல் நடத்தியவர்கள் இலங்கை மீனவர்கள் என்று சந்தேகிக்கப்படுகிறது.

இந்த நிலையில், கடந்த மூன்று மாதங்களாக ஆறுகாட்டுத்துறை மீனவர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்பட்டு வருவதன் பின்னணி குறித்தும், தாக்குதல் நடத்தியவர்கள் உண்மையில் யார் என்பது குறித்தும் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT