தமிழகம்

உணவு பதப்படுத்தும் தொழிலுக்கு மானியம்: தென்காசி மாவட்ட ஆட்சியர் தகவல்

செய்திப்பிரிவு

ரூ.10 கோடி முதல் ரூ.100 கோடி வரை முதலீடு செய்யும் உணவு பதப்படுத்தும் தொழில்முனைவோர்கள் இந்த கொள்கையின் மூலம் வழங்கப்படும் சலுகைகள், மானியங்களை பெற்று பயனடையலாம்.

தமிழகத்தில் உணவு பதப்படுத்தும் தொழில்களில் நல்ல முன்னேற்றம் அடைய வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

தமிழகத்தில் 24,000 சிறு மற்றும் மிகச்சிறு உணவு பதப்படுத்தும் நிறுவனங்களும், ஆயிரத்து 100 நடுத்தர மற்றும் பெரிய அளவிலான நிறுவனங்களும் இயங்கி வருகின்றன.

இந்தியாவின் உணவு பதப்படுத்துதலில் தமிழ்நாட்டின் பங்களிப்பு 7 சதவீதமாகும்.

உணவு பதப்படுத்தும் கொள்கை 2018ல் நிலம், நீர், மின்சாரம், முதலீட்டு மானியம் மற்றும் பணி ஊதிய விகித மானியம், வட்டி மானியம் மற்றும் மகளிர், ஆதிதிராவிடர், பழங்குடியின தொழில் முனைவோர்களுக்கு அதிகரிக்கப்பட்ட வட்டி மானியம், நடுத்தர முதலீட்டு நிறுவனங்களுக்கு சிறப்பு சலுகை, முத்திரைக் கட்டணத்தில் விலக்கு, சந்தை கட்டணத்தில் விலக்கு, சந்தைப்படுத்துதலில் உதவி, தரச்சான்று, போக்குவரத்து வசதி, ஏற்றுமதி ஊக்கத் தொகை, திறன் மேம்பாட்டுப் பயிற்சி, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஆய்வகங்கள் அமைத்தல், ஒற்றைச் சாளர வசதி, தொழிலாளர்களுக்கான சலுகைகள் போன்ற சலுகைகளை வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளன.

எனவே ரூ.10 கோடி முதல் ரூ.100 கோடி வரை முதலீடு செய்யும் உணவு பதப்படுத்தும் தொழில்முனைவோர்கள் இந்த கொள்கையின் மூலம் வழங்கப்படும் சலுகைகள், மானியங்களை பெற்று பயனடையலாம்.

மேலும் விவரங்களுக்கு மாவட்ட வேளாண்மைத் துணை இயக்குநரை (வேளாண் வணிகம்) தொடர்புகொள்ளலாம் என்று தென்காசி மாவட்ட ஆட்சியர் அருண் சுந்தர் தயாளன் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT