ராமேஸ்வரம் ஓலைக்குடா பகுதியில் அமைக்கப்பட்டு வரும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்றக் கோரிய வழக்கில், தமிழக தலைமை வனக்காவலர் பதில்மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
ராமேஸ்வரம் ஓலைகுடா பகுதியைச் சேர்ந்த அருள் ஆரோக்கியமேரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார்.
அதில்," ஓலைக்குடா பகுதியில் 1000 க்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்களின் பிரதான தொழிலாக மீன்பிடித்தல் இருந்து வருகிறது. கடற்கரையில் இருந்து ஆறு கிலோ மீட்டர் தொலைவுவரை மட்டுமே மீன்பிடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதற்குமேல் இலங்கை கடல் எல்லை தொடங்குகிறது. அதோடு ஓலைக்குடா கடற்கரை பகுதியில் அரியவகை உயிரினங்களும் அதிக அளவில் வாழ்ந்து வருகின்றன.
தற்போது ஓலைக்குடா பகுதியில் ராமேஸ்வரம் நகராட்சி சார்பாக கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட உள்ளது. சுத்திகரிப்பு செய்த நீரை பைப்லைன் மூலம் கடலில் கலப்பதற்கு வேலைகள் தொடங்கப்பட்டு உள்ளன.
இந்த சுத்திகரிப்பு நிலையம் கடற்கரையிலிருந்து 90 மீட்டர் தொலைவில் ஆரம்பிக்கப்பட உள்ளது இதனால், இயற்கை சீற்றங்கள் ஏற்பட்டால் அப்பகுதி மிக அதிக அளவில் பாதிக்கப்படும்.
மேலும் கழிவுநீர் சுத்திகரிப்பிற்காக ஆள்துளை கிணறு அமைக்கப்பட உள்ளது. தீவுகளில் அருகே ஆழ்துளை கிணறு அமைப்பதன் மூலம் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் சூழ்நிலை உள்ளது. இதனால் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைய பணியை தற்காலிகமாக நிறுத்தி வைக்க இடைகால தடை விதிக்க வேண்டும், மேலும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்றுவதற்கு உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது
மனுதாரர் தரப்பில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கு மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு துறையிடம் அனுமதி பெறவில்லை என கூறப்பட்டது.
இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புத் துறையிடம் தடையில்லா சான்று பெறப்பட்டுள்ளதா? என்பது குறித்து விளக்கம் அளிக்கவும், வழக்கு குறித்து தமிழக தலைமை வனகாவலர் பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை செப்டம்பர் 29ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.