பப்ஜி விளையாட்டுச் செயலிக்கு மத்திய அரசு தடை விதித்திருப்பதை பாமக நிறுவனர் ராமதாஸ் வரவேற்றுள்ளார்.
இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டைக் காப்பதற்காகவும், இந்தியாவின் பாதுகாப்பை உறுதி செய்யவும், பப்ஜி உள்பட சீனாவின் 118 ஸ்மார்ட்போன் செயலிகளுக்குத் தடை விதித்து மத்திய அரசு இன்று (செப்.2) அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்தியாவில் பப்ஜி விளையாாட்டுக்கு மட்டும் 3.30 கோடி வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இது தொடர்பாக, ராமதாஸ் தன் ட்விட்டர் பக்கத்தில், "இந்தியாவில் பப்ஜி (PUBG) எனப்படும் இணைய விளையாட்டு செயலி உள்ளிட்ட 118 செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்திருப்பது வரவேற்கத்தக்கது. கல்வியைச் சிதைத்து வன்முறையை வளர்க்கும் இந்தச் செயலி தடை செய்யப்பட்டிருப்பதன் மூலம் மாணவர்கள் மன அழுத்தத்திலிருந்து மீட்கப்படுவார்கள்!
பப்ஜி இணைய விளையாட்டைத் தடை செய்ய வேண்டும் என்று கடந்த ஆண்டு நவம்பர் 10-ம் தேதியே நான் வலியுறுத்தியிருந்தேன். பாமகவின் கோரிக்கை தாமதமாக, வேறு காரணங்களுக்காக ஏற்கப்பட்டிருந்தாலும், இதனால் மாணவர்கள் நலன் பாதுகாக்கப்படும் என்பதில் மகிழ்ச்சி!
பப்ஜி விளையாட்டு தடை செய்யப்பட்டுள்ள நிலையில், இதுவரை அந்த விளையாட்டுக்கு அடிமையாகியிருந்த மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் சிறுவர்களுக்கு மனநல ஆலோசனைகள் வழங்கப்பட வேண்டும். உளவியல் சிக்கல்களுக்கு ஆளாகாமல் தடுக்கப்பட வேண்டும்!" எனப் பதிவிட்டுள்ளார்.