கரோனா தொற்றில் இருந்து குணமடைந்த தமிழ்நாடு தீயணைப்பு மீட்பு பணித் துறை வீரர்கள் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் நேற்று பிளாஸ்மா தானம் செய்தனர். இதை சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், தீயணைப்பு மீட்புப் பணிகள் துறை இயக்குநா் சி.சைலேந்திரபாபு உள்ளிட்டோர் பார்வையிட்டனர். படம்: ம.பிரபு 
தமிழகம்

கரோனாவில் இருந்து குணமடைந்த 29 தீயணைப்பு வீரர்கள் பிளாஸ்மா தானம்: அமைச்சர் சி.விஜயபாஸ்கர் பாராட்டு

செய்திப்பிரிவு

கரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்த 29 தீயணைப்பு வீரர்கள் பிளாஸ்மா தானம் செய்தனர். அவர்களுக்கு அமைச்சர் சி.விஜயபாஸ்கர் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.

தமிழகத்தில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அலோபதி, சித்தா, ஆயுர்வேதா, ஓமியோபதி மருந்துகளைக் கொண்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே, சோதனை முறையில், வைரஸ் தொற்றால்பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் ரத்தத்தில் இருந்து பிளாஸ்மாவை பிரித்தெடுத்து அதை கரோனா பாதித்தவர்களுக்கு செலுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்த சோதனை முயற்சி வெற்றி அடைந்ததால், சென்னை அரசு பொது மருத்துவமனையில் ரூ.2.34 கோடி செலவில் அமைக்கப்பட்ட பிளாஸ்மா வங்கி கடந்த ஜூலை 23-ம் தேதி திறக்கப்பட்டது. வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தவர்கள் தாமாக முன்வந்துபிளாஸ்மா தானம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்த தீயணைப்பு வீரர்கள் 29 பேர் நேற்று பிளாஸ்மா தானம் செய்தனர். அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக பாராட்டுச் சான்றிதழ்களை சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வழங்கினார். தீயணைப்பு, மீட்பு பணிகள் துறை இயக்குநர் சி.சைலேந்திரபாபு, வடக்கு மண்டல இணை இயக்குநர் பிரியா ரவிச்சந்திரன், மருத்துவமனை டீன் தேரணிராஜன், ரத்த வங்கித் தலைவர் சுபாஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.

225 பேர் குணமடைந்தனர்

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சி.விஜயபாஸ்கர், ‘‘கரோனாவில் இருந்து குணமடைந்த முன்களப் பணியாளர்கள் பலரும் பிளாஸ்மா தானம் செய்து வருகின்றனர். இதுவரை, இங்கு 152 பேர் பிளாஸ்மா தானம் செய்துள்ளனர். பிளாஸ்மா சிகிச்சை மூலம் 225 பேர் குணமடைந்துள்ளனர்.

மதுரை, தஞ்சாவூர், திருநெல்வேலி உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் பிளாஸ்மா வங்கி தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’’ என்றார்.

SCROLL FOR NEXT