தமிழகம்

ஆயிரம் போட்டியாளர்களுக்கு மேல் பங்கெடுத்த மெட்ராஸ் விநாடி வினா போட்டி

செய்திப்பிரிவு

தி மெட்ராஸ் ஓபன் என்கிற விநாடி வினா போட்டியில் ஆயிரம் நபர்களுக்கும் மேல் பங்கெடுத்துள்ளனர். இதில் ஆறு பேர் இறுதிச் சுற்றுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு 3 வெற்றியாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

மெட்ராஸ் வார கொண்டாட்டங்களை முன்னிட்டு ஒவ்வொரு வருடமும் மெட்ராஸ் ஓபன் என்கிற விநாடி வினா போட்டி ( Madras Open Quiz) நடத்தப்பட்டு வருகிறது. இந்த வருடம் ஊரடங்கு காரணமாக இணையம் மூலமாக இந்தப் போட்டி நடத்தப்பட்டது. இந்தப் போட்டியில் பங்கேற்க முதல்கட்ட தேர்வுச் சுற்றில் 1000க்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர்.

இதில் அதிக மதிப்பெண்கள் எடுத்த முதல் 6 பேர் இறுதிச் சுற்றில் போட்டியிட்டனர். இறுதிச் சுற்றை நடத்தியவர் டாக்டர். சுமந்த் சி ராமன். உற்சாகமான முறையில் நடத்தப்பட்ட இந்த போட்டி இணையம் மூலமாக நேரலையிலும் ஒளிபரப்பானது.

ஸ்ரீராம் ஸ்ரீதர் முதல் பரிசை வென்றார். ஜெயகாந்தன் இரண்டாவது பரிசையும், தேஜஸ் வெங்கடராமன் மூன்றாம் பரிசையும் வென்றனர். இதில் தேஜஸ் வெங்கடராமன், பிஎஸ்பிபி பள்ளியில் 12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர். இந்தப் போட்டியில் பங்கேற்ற இளம் போட்டியாளரும் இவரே. வெற்றியாளர்களோடு சேர்த்து மற்ற மூன்று பேருக்கும் முருக்கப்பா குழுமம் வழங்கிய பரிசுகள் அளிக்கப்பட்டன.

SCROLL FOR NEXT