தமிழகம்

வளிமண்டல சுழற்சி, வெப்பச்சலனம்: 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

செய்திப்பிரிவு

வளிமண்டல சுழற்சி, வெப்பச்சலனம் காரணமாக நாளை (செப். 01) உள் மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், சேலம், நாமக்கல், திருப்பூர், ஈரோடு, நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழையும் பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்த வானிலை ஆய்வு மைய செய்திக் குறிப்பு:

“தென் தமிழகத்தை ஒட்டி நிலவும் வளிமண்டல சுழற்சி (கடல் மட்டத்திலிருந்து 1.5 கிலோமீட்டர் உயரம் வரை) மற்றும் வெப்பச்சலனம் காரணமாக உள் மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.

கடலோர மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் லேசான மழையும் பெய்யும். சேலம், கரூர், கோவை, நீலகிரி, திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும்.

நாளை (செப். 01) உள் மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், கடலோர மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் லேசான மழையும், சேலம், நாமக்கல், திருப்பூர், ஈரோடு, நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழையும் பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியசையும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியசையும் ஒட்டி பதிவாகக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச பெய்த மழை விவரம்:

மாரண்டஹள்ளி (தர்மபுரி), ராயகோட்டை (கிருஷ்ணகிரி) தலா 7செ.மீ, பாலக்கோடு (தர்மபுரி), சமயபுரம் (திருச்சி ) தலா 6 செ.மீ , வலங்கைமான் (திருவாரூர்), கிருஷ்ணகிரி, வாணியம்பாடி (திருப்பத்தூர்), திருச்சி சந்திப்பு, கதநடப்பட்டி (வேலூர்) தலா 5 செ.மீ, திருப்பத்தூர் (சிவகங்கை), குளித்தலை (கரூர்), மேட்டூர் (சேலம்), பென்னாகரம் (தர்மபுரி), ஆற்காடு (ராணிப்பேட்டை) திருப்பலபந்தல் (கள்ளக்குறிச்சி) தலா 4 செ.மீ, தோகைமலை (கரூர் ), வேலூர், ஆரணி (திருவண்ணாமலை), சின்னக்கல்லார் (கோவை ), மணலூர்பேட்டை (கள்ளக்குறிச்சி), வேங்கூர் (கள்ளக்குறிச்சி), காரியாபட்டி (விருதுநகர் ) தலா 3 செ.மீ,

மீனவர்களுக்கான எச்சரிக்கை :

ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 04 வரை தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 03 வரை கேரளா லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

செப்டம்பர் 02 மற்றும் 03 தேதிகளில் கேரளா லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்.

கடல் உயர் அலை முன் அறிவிப்பு :

தென் தமிழக கடலோர பகுதிகளில் குளச்சல் முதல் தனுஷ்கோடி செப்டம்பர் 01 இரவு 11.30 மணி வரை கடல் உயர் அலை 1.9 முதல் 2.9 மீட்டர் வரை எழும்பக்கூடும்”.

இவ்வாறு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT