கோவை மாநகராட்சி ஆணையராக இருந்த ஷ்ரவன் குமார் ஜடாவத் உட்பட 5 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து தலைமைச் செயலர் கே.சண்முகம் வெளியிட்ட அறிவிப்பு:
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் எஸ்.பிரபாகர், இந்து சமய அறநிலையத் துறை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை இந்த பதவியை, வருவாய் நிர்வாகஆணையராக உள்ள பணீந்திர ரெட்டி கூடுதலாக கவனித்து வந்தார். பழனி தண்டாயுதபாணி சுவாமிகோயில் செயல் அதிகாரி வி.ஜெயசந்திர பானு ரெட்டி, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். ஆசிரியர் தேர்வு வாரியத்தலைவர் ஜி.லதா, சமக்ர சிக்ஷா மாநில திட்ட இயக்குநராக நியமிக் கப்பட்டுள்ளார்.
கோவை மாநகராட்சி ஆணையராக இருந்த ஷ்ரவன் குமார் ஜடாவத், தமிழக வேளாண் துறை துணை செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும், சென்னை பெருநகர மாநகராட்சி துணை ஆணையர் (பணிகள்) பி.குமரவேல் பாண்டியன், கோவை மாநகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள் ளது.
சமீபத்தில், கோவை மாநகராட்சி பகுதியில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில் வழங்கப்பட்ட மாணவர்கள் சேர்க்கை விண்ணப்பத்தில் 3-வது மொழி குறித்த சர்ச்சை எழுந்தது. இதில், போலி விண்ணப்பம் எனஆணையர் விளக்கம் அளித்த நிலையில், தற்போது அவர் மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.