தமிழகம்

சிலை கடத்தல் வழக்குகள் தொடர்பான 41 விசாரணை ஆவணங்கள் மாயம் குறித்து டிஜிபி அறிக்கை அளிக்க வேண்டும்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

செய்திப்பிரிவு

சிலை கடத்தல் வழக்குகள் தொடர்பான 41 விசாரணை ஆவணங்கள் மாயமானது குறித்து போலீஸ் டிஜிபி அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் தாக்கல் செய்திருந்த மனுவில் கூறியிருப்பதாவது:

சர்வதேச சிலை கடத்தல் கும்பல் தமிழகத்தில் உள்ள பாரம்பரியமிக்க, விலைமதிக்க முடியாத, புராதன சிலைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளது. இந்த சிலை கடத்தலில் அரசியல்வாதிகள், போலீஸ் உயர் அதிகாரிகள், அறநிலையத் துறை அதிகாரிகள் என பலருக்கும் தொடர்புள்ளது.

இந்நிலையில் சிலை கடத்தல் தொடர்பாக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளில் தொடர்புடைய 41 கேஸ் டைரிகள் எனப்படும் விசாரணை ஆவணங்கள் மாயமாகியுள்ளன.இதனால் அந்த வழக்குகள் கைவிடப் பட்டு குற்றம் சாட்டப்பட்டவர்களும் தண்டனையிலிருந்து தப்பியுள்ளனர்.

ரூ.400 கோடி மோசடி

எனவே, இதுதொடர்பாக பணியில் உள்ள அதிகாரியை நியமிக்காமல், உயர் நீதிமன்றத்தின் மேற்பார்வையில் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி ஒருவரை நியமித்து விசாரிக்க உத்தரவிட வேண்டும். அத்துடன் இந்த 41 வழக்கு ஆவணங்கள் மாயமாகி விட்டன என்ற அடிப்படையில் இதுதொடர்பான சிலை கடத்தல் வழக்குகளை முடித்து வைக்க தடை விதிக்க வேண்டும். இவ்வாறு கோரியிருந்தார்.

இந்த வழக்கு நேற்று நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது. அப்போது வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் ஆஜராகி, குற்ற வழக்குகளின் விசாரணை ஆவணங்கள் மாயமாகி விட்டது எனக்கூறி வழக்கை முடித்து வைத்த போலீஸ் அதிகாரிகளின் பெயர் உள்ளிட்ட விவரங்களை வெளிப்படையாக வெளியிட வேண்டும் என்றும் அவர்கள் மீது குற்றவியல் ரீதியாக வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இதில் ரூ. 400 கோடி வரை மோசடி நடந்துள்ளது என்றும் வாதிட்டார்.

அதையடுத்து நீதிபதிகள், இதுதொடர்பாக தமிழக அரசு மற்றும் போலீஸ் டிஜிபி, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை வரும் செப்.15-க்கு தள்ளி வைத்தனர்.

SCROLL FOR NEXT