ஓடிடி முறையில் திரைப்படங்களை வெளியிடுவது ஆரோக்கியமானதல்ல என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.
கயத்தாறில் அமைச்சர் கடம்பூர் ராஜூ செய்தியாளர்களிடம் கூறும்போது, கரோனா வைரஸ் என்பது உலகளாவிய பிரச்சினை.
தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் திரையரங்குகள் திறக்கப்படவில்லை. திரையரங்குகளில் சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது அரிது.
குறிப்பிட்ட எண்ணிக்கையில் தான் திரையரங்குகளை இயக்க வேண்டுமென்றால் அவர்களுக்கு நஷ்டம் ஏற்படும். கரோனா தாக்கம் குறையும் போது இதற்கு சுமூக தீர்வு கிடைக்கும். காலப்போக்கில் ஏற்படும் சூழ்நிலையை பொருத்து அரசு முடிவெடுக்கும்.
தமிழகத்தில் ஓ.டி.டி. இணையதளத்தில் திரைப்படங்களை வெளியிடுவது தொடர்பான சட்டம் எதுவுமில்லை.
பாதிக்கப்படக்கூடிய பல்லாயிரக்கணக்கான திரையரங்கு தொழிலாளர்களின் நலன் கருதி தயாரிப்பாளர்கள், நடிகர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் கலந்து பேசி முடிவெடுக்க வேண்டும்.
ஓடிடி இணையதளத்தில் திரைப்படத்தை வெளியிடுவது ஆரோக்கியமானது அல்ல. முத்தரப்பினரும் கலந்து பேச முன் வந்தால் அரசு அதற்கு உதவும், என்றார் அவர்.